2012-08-21 16:18:15

வடகிழக்கு இந்தியர்க்கெதிரான செய்திகளுக்கு அனைத்திந்திய கத்தோலிக்கக் கழகம் கண்டனம்


ஆக.21,2012. இந்தியாவின் வடகிழக்கில் வாழும் மக்களுக்கு எதிராக வெறுப்பூட்டும் செய்திகளைப் பரப்பி நாட்டில் வன்முறையைத் தூண்டும் சில சமயத் தீவிரவாதிகளின் முயற்சிகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது AICU என்ற அனைத்திந்திய கத்தோலிக்கக் கழகம்.
வடகிழக்கு இந்தியர்களுடன் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிப்பதாகக் கூறியுள்ள AICUன் புதிய தலைவர் Eugene Gonsalves, சமூக ஊடக வலைத்தளங்களைப் பயன்படுத்தி நாட்டை குழப்பத்துக்குள் உள்ளாக்கியவர்களுக்கு எதிரானத் தனது கண்டனத்தையும் வெளியிட்டுள்ளார்.
அசாமில் இடம்பெறும் இன வன்முறை தொடர்பாக தென்னிந்தியாவில் வாழும் வடகிழக்கு இந்தியர்கள் தாக்கப்படுவார்கள் என்ற வதந்திச் செய்திகள் வெளியானதையொட்டி ஆயிரக்கணக்கான மக்கள் தாயகங்களுக்குத் திரும்பினர்.
ஆயினும், வட கிழக்கு மாநிலத்தவர் தாக்கப்படுவதாக பரவிய செய்தி வதந்தி என உணர்ந்த, அம்மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள், மீண்டும் சென்னை திரும்பி வருவதாக, இரயில்வே துறை அதிகாரிகள் இச்செவ்வாயன்று தெரிவித்தனர்
இந்தியாவில் 91 வருட பழமை கொண்ட AICU அமைப்பில் ஏறத்தாழ ஒரு கோடியே 70 இலட்சம் கத்தோலிக்கப் பொதுநிலையினர் உறுப்பினர்களாக உள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.