மியான்மாரில் 50 ஆண்டுகளாகநிலவிய செய்தி தணிக்கைச் சட்டம் நீக்கம்
ஆக.20,2012. கடந்த 50 ஆண்டுகளாக மியான்மார் ஊடகங்கள் மீது நடைமுறையில் இருந்த செய்தி
தணிக்கைமுறை நீக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். மியான்மாரில்
செய்தியாளர்கள் தமது செய்திகளை அச்சிடுவதற்கு முன்னதாக அவற்றை அரசின் 'ஊடகங்கள் பற்றிய
விசாரணை மற்றும் பதிவு திணைக்களத்துக்கு' அனுப்பி தணிக்கைக்கு உட்படுத்திய பின்னரே வெளியிட
முடியும் என்ற சட்டம் இதுவரை இருந்துவந்தது. கடந்த ஆண்டு இராணுவ அரசின் ஆட்சி முடிவுற்ற
பின்னர், கடந்த 50 ஆண்டுகளாக இராணுவ அரசு ஊடகங்களை எல்லாவழிகளிலும் கட்டுப்படுத்தி வைத்திருந்த
தணிக்கை நடைமுறை அவசியம் இல்லை என்பதால், பழைய சட்டம் நீக்கப்பட்டுள்ளதாக புதிய அரசு
அறிவித்துள்ளது. இருந்தபோதிலும், ஊடகவியலாளர்கள் வெளியிடுகின்ற செய்திகளுக்காக அவர்களை
தண்டிக்கும் கடுமையான சட்டங்கள் தொடர்ந்து அங்கு நடைமுறையில் உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.