2012-08-20 15:01:18

திருத்தந்தை - இவ்வுலகம் தரவிழைந்த பதவிகளைவிட்டு இயேசு விலகிச்சென்றார்


ஆக.20,2012. இவ்வுலகம் தனக்குத் தரவிழைந்த பதவிகளைவிட்டு விலகியதோடு நின்றுவிடாமல், தன் சீடர்களையும் புகழைத்தேடாத ஒரு வாழ்வைத் தேர்ந்துகொள்ளுமாறு இயேசு அழைத்தார் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
கடந்த சில வாரங்களாக யோவான் நற்செய்தியின் ஆறாம் பிரிவில் இயேசு கூறிவரும் வார்த்தைகளின் அடிப்படையில் தன் ஞாயிறு மூவேளை செப உரைகளை வழங்கிவந்த திருத்தந்தை, அதன் தொடர்ச்சியாக இஞ்ஞாயிறன்றும் தன் சிந்தனைகளை வழங்கினார்.
திருத்தந்தையர்களின் கோடை விடுமுறை இல்லமான Castel Gandolfoவிலிருந்து திருத்தந்தை வழங்கிய மூவேளை செப உரையில், 'வானின்று இறங்கிய உணவாக' தன்னையே மக்களுக்கு இயேசு அறிமுகப்படுத்தியதை, தியாக வாழ்வுக்கு அவர் விடுக்கும் ஓர் அழைப்பாக விளக்கினார்.
மக்களின் புகழை மட்டும் இயேசு தேடுபவராக இருந்திருந்தால், அவர்கள் ஏற்பதற்குக் கடினமான உணமைகளைச் சொல்லாமல் இருந்திருப்பார், ஆனால், தான் எருசலேமில் படவிருக்கும் துன்பங்களை விளக்கும் கசப்பான உண்மைகளாய் இயேசுவின் வார்த்தைகள் ஒலித்தன என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.
நற்கருணை என்ற அருள்சாதனத்தில் தாழ்ச்சியின் சிகரமாய் விளங்கும் இறைமகனைச் சந்திக்க நாம் தயாராகவேண்டும் என்று திருத்தந்தை அழைப்பு விடுத்தார்.








All the contents on this site are copyrighted ©.