மதுப் பழக்கத்திற்குத் தீர்வு காண தென்கொரியத் திருஅவையும் காவல் துறையும்இணைந்து முயற்சிகள்
ஆக.17,2012. மது அருந்துவதால் ஏற்படும் பிரச்சனைகளை, சட்டங்களைக்கொண்டு மட்டும் தீர்த்துவிடமுடியாது,
அந்தப் பிரச்னைக்கு மனநல ரீதியாகவும் உதவிகள் தேவைப்படுகின்றன என்று Seoul பேராயர் Andrew
Yeom Soo-jung கூறினார். குடும்பங்களில் வன்முறைகளையும், சாலைகளில் விபத்துக்களையும்
பெருகச்செய்யும் மதுப் பழக்கத்திற்குத் தீர்வு காண்பதற்கு காவல் துறையும், தலத் திருஅவையும்
இணைந்து முயற்சிகளை மேற்கொள்ளும் ஓர் ஒப்பந்தம் Seoul உயர்மறைமாவட்ட அலுவலகத்தில் அண்மையில்
கையெழுத்தானது. இந்த நிகழ்வில் பங்கேற்ற பேராயர் Soo-jung, ஐந்து கோடி மக்களைக் கொண்ட
தென் கொரியாவில் 77 இலட்சம் மக்கள் மது அருந்துவது கவலையைத் தருகிறது என்று கூறினார். மது
அருந்துவதால், பல சாலைவிபத்துகளுக்குக் காரணமாகும் நபர்களைக் கடுமையாகத் தண்டிக்க காவல்துறை
முயற்சிகள் மேற்கொள்வது மட்டும் இந்தப் பிரச்சனையைத் தீர்க்காது, எனவே கத்தோலிக்க நிறுவனங்கள்
மூலம் இந்தப் பழக்கம் உள்ளவர்களுக்குத் தகுந்த வழிகளைக் காட்டவும் நாங்கள் முயல்கிறோம்
என்று காவல்துறை உயர் அதிகாரி Kim Yong-pan செய்தியாளர்களிடம் கூறினார்.