கிராம மக்களின் வளர்ச்சிக்கு இந்தியக் கத்தோலிக்கத் திருஅவை பெரும்பணியாற்றியுள்ளது
- இந்தியக் குடியரசுத் தலைவர்
ஆக.15,2012. இந்தியாவின் வளர்ச்சிக்கு, முக்கியமாக, கிராம மக்களின் வளர்ச்சிக்கு இந்தியக்
கத்தோலிக்கத் திருஅவை பெரும்பணியாற்றியுள்ளது என்று இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப்
முக்கர்ஜி கூறினார். அண்மையில் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்ற பிரணாப் முக்கர்ஜி
அவர்களை இந்திய ஆயர் பேரவையின் தலைவர் கர்தினால் Oswald Gracias அவர்களும், பேரவையின்
பொதுச் செயலர் பேராயர் Albert D’Souza அவர்களும் சந்தித்து, இந்தியத் திருஅவையின் சார்பில்
வாழ்த்துக்களைத் தெரிவித்தபோது, குடியரசுத் தலைவர் இவ்வாறு கூறினார். துவக்கக் காலத்திலிருந்தே
கிறிஸ்துவ மறை இந்திய மண்ணில் வேரூன்றிய ஒரு சமயம் என்பதைச் சுட்டிக்காட்டிய அரசுத்தலைவர்,
இந்தியக் கத்தோலிக்கத் திருஅவை கல்விக்கும், நல வாழ்வுக்கும் ஆற்றிவரும் பணிகளைச் சிறப்பாகக்
குறிப்பிட்டுப் பேசினார். நாட்டில் அமைதியையும், மத நல்லிணக்கத்தையும் உருவாக்க கத்தோலிக்கத்
திருஅவை இதுவரை உழைத்ததைப் போலவே, தொடர்ந்து தீவிரமாக உழைக்கும் என்ற உறுதியை ஆயர் பேரவையின்
தலைவர் கர்தினால் Gracias குடியரசுத் தலைவரிடம் எடுத்துரைத்தார்.