2012-08-15 15:48:44

எட்டு ஆண்டுகளுக்கு முன் திருத்தந்தை அருளாளர் இரண்டாம் ஜான்பால் மேற்கொண்ட இறுதிப் பயணம்


ஆக.15,2012. சரியாக எட்டு ஆண்டுகளுக்கு முன், 2004ம் ஆண்டு, ஆகஸ்ட் 14,15 தேதிகளில் திருத்தந்தை அருளாளர் இரண்டாம் ஜான்பால் அவர்கள் தன் இறுதிப் பயணத்தை மேற்கொண்டதை வத்திக்கான் வானொலி இச்செவ்வாயன்று நினைவுகூர்ந்தது.
வயதாலும், பார்கின்சன்ஸ் நோயாலும் உடல்நலம் மிகவும் குன்றிய நிலையில் அருளாளர் இரண்டாம் ஜான்பால் அவர்கள் மேற்கொண்ட அந்த இறுதிப் பயணம், அவரது 104வது அயல்நாட்டுப் பயணமாக விளங்கியது.
திருத்தந்தையாகப் பொறுப்பேற்ற மூன்றாவது மாதத்தில், அதாவது, 1979ம் ஆண்டு ஜனவரி 25 முதல் பிப்ரவரி 1 வரை மெக்சிகோ, தோமினிக்கன் குடியரசு, மற்றும் பஹாமா நாடுகளுக்குத் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அவர்கள் மேற்கொண்டது முதல் பயணம் என்பதையும், 2004ம் ஆண்டு ஆகஸ்ட் 14,15 தேதிகளில் பிரான்ஸ் நாட்டு லூர்து அன்னைத் திருத்தலத்திற்கு மேற்கொண்டது இறுதிப்பயணம் என்பதையும் வத்திக்கான் வானொலி நினைவுறுத்துகிறது.
அருளாளர் இரண்டாம் ஜான்பால் அவர்கள் திருத்தந்தையாகப் பணியாற்றிய 27 ஆண்டுகளில், லூர்து அன்னைத் திருத்தலத்திற்கு மும்முறை திருப்பயணியாகச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.