ஆக.10,2012. உலகளவில் உணவு தானியங்கள் மற்றும் சர்க்கரையின் விலை ஜூலை மாதம் கடுமையாக
உயர்ந்துள்ளதாக ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய அமைப்பான FAO கூறியுள்ளது. கடந்த ஜூலை
மாதத்தில் மட்டும் கோதுமை, சோளம், கம்பு, போன்ற பல தானியங்களின் விலை 17 விழுக்காடு உயர்ந்துள்ளது
என்று FAO தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் ஏற்பட்ட வறட்சி மற்றும் இரஷ்யாவில் ஏற்பட்ட
உற்பத்தி பிரச்சினைகளாலேயே இந்தக் கடுமையான விலையேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் அந்த அமைப்பு
கூறியுள்ளது. உலகின் மிகப்பெரிய சர்க்கரை உற்பத்தி நாடான பிரேசிலில் கரும்பு விவசாயம்
பாதிக்கப்பட்டதால், சர்க்கரையின் விலையும் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்தது. எனினும்
அரிசியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. தானியங்கள் மற்றும் சர்க்கரை மட்டுமல்லாமல்,
உலகளவில் அனைத்து உணவுப் பொருட்களின் விலையும் சராசரியாக ஆறு விழுக்காடு உயர்ந்துள்ளது
என்று FAO தெரிவித்துள்ளது.