அடிப்படைவாத கும்பல்களுக்கு மதம் முக்கியமல்ல, வன்முறையே முக்கியம்
- Abujaபேராயர்
ஆக.09,2012. நைஜீரியாவின் Okene நகரில் இத்திங்களன்று ஒரு கிறிஸ்தவ கோவில் தாக்கப்பட்டதில்
20 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அடுத்த 24 மணி நேரத்திற்குள் ஒரு மசூதியும் தாக்கப்பட்டதில்
நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாக்குதல்களைத் தொடர்ந்து, Fides செய்திக்கு அளித்த
பேட்டியொன்றில், Abuja பேராயர் John Olorunfemi Onaiyekan, Boko Haram என்ற அடிப்படைவாதக்
கும்பலுக்கு கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாமல், இஸ்லாமியரும் பலியாகி வருகின்றனர் என்று கூறினார். Okene
நகரில் இஸ்லாமியர் பெரும்பான்மையினாய் இருந்தாலும், அந்நகரில் இதுவரை கிறிஸ்தவர்களும்,
இஸ்லாமியரும் நல்லுறவுடன் வாழ்ந்து வந்துள்ளனர் என்பதைச் சுட்டிக் காட்டிய பேராயர் Onaiyekan,
அடிப்படைவாத இஸ்லாமியக் கும்பல்களுக்கு மதம் முக்கியமல்ல, வன்முறையே முக்கியம் என்பதை
அண்மைய நிகழ்வுகள் காட்டுகின்றன என்றார். உண்மை நிலையைப் புரிந்துகொண்டு, நாட்டை அமைதி
வழிக்கு மீண்டும் கொணர்வதற்கு கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும் இணைந்து உழைக்க வேண்டும்
என்று பேராயர் Onaiyekan அழைப்பு விடுத்துள்ளார்.