நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலையொட்டி Sierra Leoneஆயர்கள் பேரவை வெளியிட்டுள்ள சுற்றுமடல்
ஆக.08,2012. நாட்டில் நிகழும் அரசியல் நடவடிக்கைகளில் தலத் திருஅவையும் இணைந்திருக்கும்,
ஆனால், எந்த ஒரு கட்சியையும், தனிப்பட்டவர்களையும் சார்ந்து இருக்காது என்று Sierra Leone
ஆயர்கள் பேரவை அறிவித்துள்ளது. இவ்வாண்டு நவம்பர் மாதம் அந்நாட்டில் நடைபெறவிருக்கும்
பொதுத் தேர்தலையொட்டி ஆயர்கள் பேரவை வெளியிட்டுள்ள சுற்றுமடலில், கிறிஸ்தவர்கள் அனைவரும்
தேர்தலில் முழுமையாகப் பங்கேற்கவேண்டும் என்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாட்டில்
நிலவும் பல்வேறு இன, மொழி பாகுபாடுகளின் அடிப்படையில் வாக்குகளை வழங்காமல், பொதுநலனை
முன்னிறுத்தி மக்கள் தங்கள் தலைவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ஆயர்கள் அழைப்பு
விடுத்துள்ளனர். தேர்தல் பிரச்சாரங்களின்போதும், தேர்தல் நிகழும்போதும் எவ்வகை வன்முறைகளும்
இல்லாமல் தேர்தல்கள் நடைபெற வேண்டுமென்றும், தேர்தல் முடிவுகளை கண்ணியமான முறையில் தலைவர்கள்
ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றும் ஆயர்கள் தங்கள் சுற்றுமடலில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.