கிழக்கு ஆசியா, பசிபிக் பகுதி நாடுகளில் வாழும் குழந்தைகள் வன்முறைகளால்
மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் - UNICEF அறிக்கை
ஆக.08,2012. குழந்தைகள் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படும்போது, அவர்கள் மட்டுமல்லாமல்,
அவர்கள் குடும்பங்களும், அவர்கள் வாழும் சமுதாயமும் பெரும் பாதிப்புக்களுக்கு உள்ளாகின்றன
என்று, குழந்தைகளின் கல்வி, கலை இவைகளை வளர்க்க உருவாக்கப்பட்டுள்ள ஐ.நா. நிதி அமைப்பான
UNICEF இப்புதனன்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. கிழக்கு ஆசியா, பசிபிக் பகுதிகளில்
உள்ள நாடுகளில் வாழும் குழந்தைகள் இந்த வன்முறைகளால் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்
என்று இவ்வறிக்கை கூறுகிறது. உலகில் வாழும் குழந்தைகளில் நான்கில் ஒரு பகுதியினர்,
அதாவது 58 கோடி குழந்தைகள், இப்பகுதிகளில் வாழ்கின்றனர் என்று கூறும் இவ்வறிக்கை, மக்கள்
நெரிச்சல் அதிகம் உள்ள பகுதிகளிலும், பல்வேறு கலாச்சாரங்களைச் சார்ந்தவர்கள் மத்தியிலும்
இக்குழந்தைகள் வளரவேண்டிய கட்டாயத்திற்கு உட்படுத்தபடுகின்றனர் என்றும் கூறுகிறது. இப்பகுதிகளில்
வாழும் குழந்தைகளில் 14 விழுக்காடு முதல் 30 விழுக்காடு வரை பாலியல் வன்முறைகளுக்கும்
ஆளாகின்றனர் என்று இவ்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது. தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில்
இப்புதனன்று நடைபெற்ற ஐ.நா. கூட்டத்தில் இவ்வறிக்கை ஆழமாக ஆய்வு செய்யப்பட்டது.