விஸ்கான்சின் குருத்வாரா வன்முறை, இந்தியப் பிரதமர் அதிர்ச்சி
ஆக.07,2012. விஸ்கான்சின் மாநில சீக்கியரின் குருத்வாராவில் நடத்தப்பட்டத் துப்பாக்கிச்சூடு
வன்முறைத் தாக்குதல் குறித்து தான் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்ததாக இந்தியப் பிரதமர்
மன்மோகன் சிங் கூறியுள்ளார். இது போன்ற நிகழ்வு மீண்டும் நடக்காதபடி விஸ்கான்சின்
அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள், இது குறித்து புலன்விசாரணையையும் நடத்துவார்கள்
என்ற தனது நம்பிக்கையையும் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். கோவிலுக்கு வந்த
அப்பாவி பக்தர்கள் மீது, காட்டுமிராண்டித்தனமாக நடத்தப்பட்ட இந்த தாக்குதல் மிகுந்த வேதனையளிக்கிறது.
இச்சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு எனது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்'
என்றும் அவர் கூறியுள்ளார். ஓக் கிரிக் பகுதியில் ஏழாண்டுகளுக்குமுன் கட்டப்பட்ட இந்த
சீக்கியர் கோவிலில், இஞ்ஞாயிறன்று இந்தியாவிலிருந்து வந்த ஒருவர் பக்தி சொற்பொழிவாற்றியதால்
400க்கும் அதிகமான சீக்கியர்கள் கூடியிருந்தனர். அப்போது குருத்வாராவுக்குள் நுழைந்த
மர்ம நபர் திடீரெனப் பக்தர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் ஏழு பேர் பலியாகினர்;
இந்த நபர் ஒரு முன்னாள் இராணுவ வீரர் எனச் சொல்லப்படுகிறது.