பிலிப்பீன்சில் வீட்டுப்பணியாளர்கள் குறித்த ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளது
ஆக.07,2012. பிலிப்பீன்ஸ் அரசு, வீட்டுப்பணியாளர்கள் குறித்த ஒப்பந்தத்தை இத்திங்களன்று
அமல்படுத்தியிருப்பதற்குத் தனது பாராட்டுதல்களைத் தெரிவித்துள்ளது ஒரு மனித உரிமைகள்
அமைப்பு. இதன்மூலம் உலகில் ஒப்பந்தத்தை அமல்படுத்தியிருக்கும் இரண்டாவது நாடு என்ற
பெருமையையும் பெறுகிறது பிலிப்பீன்ஸ். இந்த ஒப்பந்தத்தை முதன்முதலாக உருகுவாய் நாடு கடந்த
ஏப்ரல் 30ம் தேதி அமல்படுத்தியது. பிலிப்பீன்ஸ் அரசின் இந்நடவடிக்கையை வரவேற்றுப்
பேசிய நியூயார்க்கை மையமாகக் கொண்ட HRW என்ற மனித உரிமைகள் அமைப்பு, ஜோர்டன், லெபனன்,
குவைத், சவுதி அரேபியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் வேலைசெய்யும் பிலிப்பீன்ஸ் நாட்டவர்,
அடிஉதைகள், கடவுட்சீட்டுப் பறிமுதல், வீட்டைவிட்டு வெளியே செல்ல விடாமல் வீட்டுக்குள்ளே
வைத்திருத்தல், நீண்டநேர வேலை, மாதங்கள் அல்லது ஆண்டுகளாய்ச் சிலருக்கு ஊதியம் கொடுக்காமல்
இருப்பது உள்ளிட்ட பல உரிமை மீறல்களை எதிர்கொள்கின்றனர் எனக் கூறியது. வெளிநாடுகளில்
வேலைசெய்யும் பிலிப்பீன்ஸ் நாட்டவர், ஆண்டுதோறும் இரண்டாயிரம் கோடி டாலருக்கு அதிகமாகத்
தங்களது நாட்டுக்கு அனுப்புகின்றனர்.