பிலிப்பீன்சில் குடும்பக்கட்டுபாடு மசோதா குறித்த விவாதங்களை நிறுத்தி வைக்குமாறு தலத்திருஅவை
வேண்டுகோள்
ஆக.07,2012. பிலிப்பீன்சில் விவாதிக்கப்பட்டு வரும் குடும்பக்கட்டுபாடு குறித்த மசோதாவை
இடைநிறுத்தம் செய்துவிட்டு, தற்போது கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு
உதவும் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு இச்செவ்வாயன்று வேண்டுகோள் விடுத்துள்ளார் அந்நாட்டுத்
திருஅவைத் தலைவர் ஒருவர். விடாது தொடர்ந்து பெய்ந்து வரும் பருவமழையால் பெரிய நீர்த்தேக்கங்களும்,
மனிலா மற்றும் அதற்கருகிலுள்ள ஒன்பது மாநிலங்களின் ஆறுகளும் நிரம்பி கரைபுரண்டோடுவதால்
பல்லாயிரக்கணக்கான மக்கள் புலம் பெயர்ந்துள்ளனர். சில பகுதிகளில் மூன்று மீட்டர் உயரத்துக்கும்
மேலாக தண்ணீர் ஓடுகிறது. இந்நிலையில், இவ்வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைவரும்
உதவ முன்வருமாறு பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவையின் குடும்பம் மற்றும் மனித வாழ்வு ஆணையத்தின்
அருட்பணி Melvin Castro கேட்டுக் கொண்டார். இதற்கிடையே, பிலிப்பீன்ஸ் நாடாளுமன்றத்தில்
இச்செவ்வாயன்று இடம்பெறவிருந்த குடும்பக்கட்டுபாடு மசோதா குறித்த விவாதத்தை அரசு தள்ளி
வைத்திருப்பதாக ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.