கிறிஸ்தவ மற்றும் முஸ்லீம் இளையோருக்கு, நீதி மற்றும் அமைதிக்கான கல்வி கற்றுக் கொடுக்கப்பட
வேண்டும் - திருப்பீடம்
ஆக.03,2012. நீதியையும் அமைதியையும் நேர்மையுடன் அறிவிக்கும் பொருட்டு உண்மை மற்றும்
சுதந்திரத்தை வளர்த்துக் கொள்ளுமாறு. கிறிஸ்தவ மற்றும் முஸ்லீம் இளையோருக்கு அழைப்பு
விடுத்துள்ளது திருப்பீட பல்சமய உரையாடல் அவை. ஒவ்வொரு குடிமகனின் மாண்பையும் உரிமைகளையும்
மதிக்கும் கலாச்சாரத்தைக் கட்டியெழுப்புகிறவர்களாகவும் இவ்விளையோர் செயல்படுமாறு கேட்டுள்ள
இத்திருப்பீட அவை, இவற்றை இவர்கள் தங்கள் வாழ்வில் அடைவதற்கு, ஏமாற்றும் குறுக்கு வழிகளைப்
பின்செல்லாமல் பொறுமை மற்றும் விடாஉறுதியைக் கொண்டிருக்குமாறும் அழைப்பு விடுத்துள்ளது. இம்மாதிரியான
வாழ்வில் உண்மையிலேயே நம்பிக்கை வைத்துள்ள மனிதர்களால் மட்டுமே நீதியும் அமைதியும் ஆட்சி
செய்யும் சமூகங்களைச் சமைக்க முடியும் என்றும் அவ்வவை கூறியுள்ளது. கடந்த ஜூலை 19
முதல் ஆகஸ்ட் 18 வரை கடைப்பிடிக்கப்படும் ரமதான் மாதத்தின் இறுதியில் சிறப்பிக்கப்படும்
‘Id al-Fitr விழாவுக்கெனச் செய்தி வெளியிட்டுள்ள திருப்பீட பல்சமய உரையாடல் அவை இவ்வாறு
கிறிஸ்தவ மற்றும் முஸ்லீம் இளையோரிடம் கேட்டுள்ளது. ஒருங்கிணைந்த முழுமனிதரின் தனித்துவத்தால்
மட்டுமே நீதியை உறுதி செய்ய முடியும் எனவும், சின்னாபின்னமாகியுள்ள இன்றைய நமது உலகில்
அமைதி குறித்து இளையோருக்கு கற்றுக் கொடுப்பது அவசரத் தேவையாக இருக்கின்றது எனவும் அச்செய்தி
வலியுறுத்துகிறது. இந்தியாவில் ஆகஸ்ட் 20ம் தேதியன்று ரம்ஜான் பண்டிகை சிறப்பிக்கப்படுகின்றது.