இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் திருத்தந்தையும், திருப்பீடத்தின்
பல்வேறு நிறுவனங்களும் ஈடுபட்டிருந்த முக்கிய நிகழ்வுகள்
ஆக.01,2012. 2012ம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் திருத்தந்தையும், திருப்பீடத்தின் பல்வேறு
நிறுவனங்களும் ஈடுபட்டிருந்த முக்கிய நிகழ்வுகள் தொகுக்கப்பட்டு, இச்செவ்வாயன்று வெளியிடப்பட்டுள்ளது. உலகெங்கும்
தீவிரவாதம் பெருகுவதற்கு நிதி உதவிகள் செய்யப்படுவதை எதிர்த்து ஐ.நா. வெளியிட்டுள்ள விதிமுறைகளுக்கு
இவ்வாண்டு ஜனவரி மாதத்தில், வத்திக்கான் தனது முழு ஒப்புதலை அளித்துள்ளது. குருக்களுக்கு
எதிராக கடந்த சில ஆண்டுகளாக எழுந்துள்ள பாலியல் முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்யவும்,
இக்குறையை நீக்க திருஅவை மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை வலியுறுத்தவும் இவ்வாண்டு பிப்ரவரி
மாதம் திருப்பீடத்தின் சார்பில் அகில உலகக் கருத்தரங்கு ஒன்று உரோம் நகரின் கிரகோரியன்
பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதே பிப்ரவரி மாதத்தில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்,
கர்தினால்கள் அவையில் 22 புதிய கர்தினால்களை இணைத்தார். மார்ச் மாதம் 23ம் தேதி முதல்
28ம் தேதி முடிய திருத்தந்தை மெக்சிகோ, கியூபா ஆகிய நாடுகளில் மேற்கொண்ட மெய்ப்புப் பணி
பயணம் வெற்றிகரமாக அமைந்தது. மேமாதம் மிலான் நகரில் நடைபெற்ற குடும்பங்களின் 7வது
உலக மாநாட்டில் கலந்துகொண்ட திருத்தந்தை, இத்தாலியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட
Emilia Romagna பகுதிகளை ஜூன் மாத இறுதியில் சென்று பார்வையிட்டார்.