இலங்கையில் மதச் சுதந்திரம் குறித்து அமெரிக்கா கவலை
ஆக.01,2012. இலங்கையில் கடந்த ஆண்டு பல மதவழிபாட்டுத் தலங்களும், சிறுபான்மை சமூகத்தினரும்
தாக்குதலை சந்திக்கவேண்டிய நிலை ஏற்பட்டது என்று அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆலயங்கள் மற்றும் கிறிஸ்தவ சமூகத்தின் மீது கடந்த
ஆண்டு பல தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக அமெரிக்கா கூறுகிறது. அதேபோல், பள்ளிவாசல்களும்
தாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சுமார் 70 விழுக்காடு அளவுக்கு
பெரும்பான்மையினராக இருக்கும் சிங்கள மக்களாலேயே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன
என்றும் அமெரிக்க அரசின் அந்த ஆண்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது. புத்தத் துறவிகள் தலைமையேற்று
நடத்திய பல குழுக்கள், 2011ம் ஆண்டு, கிறிஸ்தவர்கள் மீது நடைபெற்ற பல தாக்குதல்கள் உள்ளூரில்
இருக்கின்ற ஊடகங்களில் வெளிவராமலேயே போனது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.