ஜூலை,31,2012. உலக அளவில் சமய சுதந்திரம் பின்னடைவு கண்டுள்ளதாக உலகில் சமய சுதந்திரம்
குறித்து அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசு இத்திங்களன்று வெளியிட்ட அறிக்கை கூறுகின்றது.
உலக அளவில் யூதமத விரோதப்போக்கும், சிறுபான்மை சமயச் சமூகங்களின் உரிமைகளைக்
கட்டுப்படுத்துவதற்காகத் தெய்வநிந்தனைச் சட்ட நடவடிக்கைகளும் அதிகரித்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளது
அவ்வறிக்கை. மேலும், இலங்கையில் சமுதாய மீறல்கள் மற்றும் மதப் பாகுபாட்டுச் சம்பவங்கள்
கடந்த 2011ம் ஆண்டு பதிவாகியுள்ளதெனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த
வருடம் கிறிஸ்தவ ஆலயத்தின்மீது பௌத்தர்கள் தாக்குதல் நடத்தியதாகவும் இவ்வாறான சில சமூகமீறல்
செயல்பாடுகளால் இலங்கையில் ஆங்காங்கே பரபரப்பு ஏற்பட்டது எனவும் கூறும் அவ்வறிக்கை, இருந்தபோதிலும்,
அண்மை ஆண்டுகளில் நடைபெற்ற தாக்குதல்களைவிட கடந்த வருடம் குறைவான தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன
எனவும் தெரிவித்தது. மத சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் இலங்கையில் பல சம்பவங்கள்
இடம்பெற்றபோது அதற்கு அரசு கண்டனம் வெளியிட்டது, ஆயினும் நடைமுறையில் செயல்பாட்டு ரீதியிலான
நடவடிக்கைகளை எடுக்கும் திட்டத்தில் பிரச்சனை உள்ளதென அமெரிக்காவின் அறிக்கை குறை கூறியுள்ளது.