சீன அரசின் ஆயர் நியமனத்தை எதிர்த்த ஏழு அருள்பணியாளர்களுக்கு அரசு எச்சரிக்கை
ஜூலை,30,2012. திருத்தந்தையின் அனுமதியின்றி சீன குரு ஒருவர் ஆயராக திருநிலைப்படுத்தப்படுவதற்கு
எதிர்ப்பு தெரிவித்த ஏழு அருள்பணியாளர்கள் தங்கள் பங்குதளங்களிலிருந்து விலகவேண்டும்
என அரசு கட்டளை பிறப்பித்துள்ளதாக அப்பகுதியிலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. அரசால்
அறிவிக்கப்பட்ட ஆயர் நியமனத்தை எதிர்க்கும் குருக்கள் தண்டிக்கப்படுவார்கள் என ஏற்கனவே
அறிவித்துள்ள சீன அரசு, தற்போது இந்த ஏழு அருள்பணியாளர்களும் மூன்று மாத கட்டாய விடுமுறையில்
சென்று, தங்கள் தவறான நிலைப்பாடு குறித்து ஆழ்ந்து சிந்திக்கவேண்டும் என அறிவித்துள்ளது. இம்மாதம்
ஆறாம் தேதி திருத்தந்தையின் அனுமதியின்றி சீன அரசால் ஆயராக திருநிலைப்படுத்தப்பட்ட குரு
ஜோசப் யூ ஃபூசெங்கிடம் அடுத்த மூன்று மாதத்திற்குள் இவ்வருள்பணியாளர்கள் மன்னிப்பு கேட்க
வேண்டும், இல்லையெனில் திருச்சபையிலிருந்து நீக்கப்படுவர் எனவும் அரசு இவ்வருள்பணியாளர்களுக்கு
எச்சரிக்கை விடுத்துள்ளது.