சிரியாவிலும் ஈராக்கிலும் வன்முறைகள் உடனடியாக நிறுத்தப்படுவதற்கு திருத்தந்தை அழைப்பு
ஜூலை,30,2012. சிரியாவிலும் ஈராக்கிலும் இடம்பெறும் இரத்தம் சிந்தும் வன்முறைகள் உடனடியாக
நிறுத்தப்படுவதற்கு இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செபத்திற்குப் பின்னர் அழைப்பு விடுத்தார்
திருத்தந்தை 16ம் பெனடிக்ட். சிரியாவில் அதிகரித்து வரும் கொடூர வன்முறைச் சம்பவங்கள்
மற்றும் அவற்றால் ஏற்படும் இறப்புகளும் படுகாயங்களும் குறித்து தான் அறிந்து வருவதாகவும்,
இந்த வன்முறைகளுக்கு அஞ்சி அகதிகளாகச் செல்லும் மக்களுக்கு அண்டை நாடுகள் தேவையான அனைத்து
மனிதாபிமான உதவிகளைச் செய்யுமாறும் கேட்டுள்ளார் திருத்தந்தை. இந்த மோதல்களுக்கு
உரையாடல் மூலம் ஓர் அரசியல் தீர்வு கண்டு அமைதியை நிலைநாட்டுவதற்கு உலக சக்திகள் தங்களால்
இயன்ற அனைத்தையும் செய்யுமாறும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை. மேலும், ஈராக்கில்
கடந்த வாரத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்புக்களில் ஒருநாளில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டோர்
இறந்தும் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் இருக்கும்வேளை, கடந்த வாரத்தில் நடந்த பல
வன்முறைத் தாக்குதல்கள் குறித்துக் குறிப்பிட்டு, இந்த நாடு மீண்டும் உறுதியான தன்மை,
ஒப்புரவு மற்றும் அமைதியின் பாதையில் செல்லுமாறு வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை. சிரியாவிலும்
ஈராக்கிலும் வன்முறைகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுடன் தான் ஆன்மீகரீதியில் ஒன்றித்திருப்பதாகவும்
உறுதி கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். சிரியாவில் அதிகரித்து வரும் மோதல்களால்
ஓராண்டுக்குள்ளாக சுமார் 20 ஆயிரம் பேர் அகதிகளாகியுள்ளனர்.