ஜூலை,30,2012. இத்தாலியின் Taranto வில் ILVA எஃகு உருக்கு ஆலை சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தல்
என்று சொல்லி நீதிமன்றம் அந்த ஆலையை மூடுவதற்கு உத்தரவிட்டிருப்பது குறித்து குறிப்பிட்டு
இதனால் தங்களது முக்கிய வருவாயை இழந்துள்ள பல்லாயிரக்கணக்கான குடும்பங்களுடன் தனது ஒருமைப்பாட்டுணர்வைத்
தெரிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். இந்த விவகாரத்துக்கு, சிறப்பாக, பொருளாதார
நெருக்கடி மிகுந்துள்ள இக்காலத்தில் மக்களின் நலவாழ்வுக்கும் அவர்கள் வேலை செய்வதற்கும்
இருக்கும் உரிமையை அங்கீகரித்து இதற்கு நியாயமான தீர்வு காணப்பட முயற்சிகள் எடுக்குமாறு
தேசிய மற்றும் உள்ளூர் அரசுகளைக் கேட்டுள்ளார் திருத்தந்தை. இன்னும், அடுத்த ஆண்டு இதே
நாளில் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் 28வது உலக இளையோர் தினம் தொடங்கவிருக்கின்றது,
திருஅவையில் இருப்பது மற்றும் விசுவாசத்தை வாழ்வதன் அழகையும் மகிழ்வையும் அனுபவிப்பதற்கு
ஏற்ற தருணமாக இத்தினம் இருக்கும், எனவே இத்தினத்திற்காகத் தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டுள்ள
எல்லாருக்கும் ஊக்கமும் நன்றியும் தெரிவிப்பதாகக் கூறினார் திருத்தந்தை.