இந்தியாவில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு சாலை விபத்து நிகழ்கிறது
ஜூலை,26,2012. இந்தியாவில் கடந்த எட்டு ஆண்டுகளில் 1,25,000 கி.மீ. அளவு சாலை வசதிகள்
கூடியுள்ளன என்று மத்திய அரசின் பெருஞ்சாலைத் துறை அண்மையில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. 2004ம்
ஆண்டு 37 இலட்சம் கி.மீ. அளவு அமைக்கப்பட்டிருந்த சாலைகளின் நீளம், 2012ம் ஆண்டில் 47
இலட்சம் கி.மீ. அளவு வளர்ந்துள்ளது என்றும், இந்த வளர்ச்சியின் பெரும்பகுதி கிராமங்களில்
செய்யப்பட்டுள்ளன என்றும் இவ்வறிக்கை கூறுகிறது. சாலைகள் அமைப்பதில் முன்னேற்றம் இருந்தாலும்,
சாலை பாதுகாப்பில் இந்தியா இன்னும் பெரும் முன்னேற்றம் காணவேண்டும் என்று ஆசிய செய்தி
நிறுவனம் கூறியுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு சாலை விபத்து நிகழ்கிறது
என்றும், சாலை விபத்துக்களில் ஒவ்வொரு 3.7 நிமிடங்களுக்கும் ஒருவர் என்ற வேகத்தில் மரணங்கள்
நிகழ்கின்றன என்றும் கூறப்படுகிறது. சாலை விபத்துக்களில் மகாராஷ்டிரா முதல் இடத்திலும்,
தமிழ் நாடு இரண்டாவது இடத்திலும், மத்தியப்பிரதேசம், கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் அடுத்தடுத்த
இடங்களிலும் உள்ளன.