2012-07-24 15:31:26

விவிலியத் தேடல் - திருப்பாடல் 131 : பகுதி 2


RealAudioMP3 யூதமத குரு ஒருவர் நீதி மன்றத்தில் சாட்சிக்கூண்டில் ஏறி நின்றார். புனிதநூல் மீது கைகளை வைத்து உறுதிமொழி எடுத்தார். பின்னர் நீதிபதி அவரிடம் கேள்விகள் கேட்க ஆரம்பித்தார். "குருவே, இந்த நாட்டில் உள்ள அனைத்து யூதக்குருக்களிலும் நீங்கள்தான் சட்டங்களில் தலைசிறந்த அறிவுள்ளவர் என்று சொல்லப்படுகிறதே, இது உண்மையா?" என்று கேட்டார். "உண்மைதான், நீதிபதி அவர்களே" என்று குரு பதிலளித்தார்.
"நீங்கள்தான் யூதமக்கள் மத்தியில் மிகவும் மதிப்பிற்குரிய குரு என்றும் சொல்லப்படுகிறதே. இதுவும் உண்மையா?" என்று நீதிபதி கேட்டதற்கு, "அதுவும் உண்மைதான்" என்று குரு சொன்னார்.
யூதகுரு தன்னைப்பற்றித் தானே இவ்வளவு உயர்வாகப் பேசுவதைக் கேட்ட நீதிபதி, "குருவே, தாழ்ச்சியைப்பற்றி, பணிவைப்பற்றி உங்கள் புனிதநூல் சொல்லித்தருகிறது. அந்த நெறியை மக்களுக்கு எடுத்துச்சொல்லும் நீங்கள் உங்களைப்பற்றியே எப்படி இவ்வளவு உயர்வாகப் பேசமுடிகிறது?" என்று தன் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார்.
அதற்கு குரு நீதிபதியிடம், "இவ்விதம் நான் பேசுவது முரண்பாடாக, பிரச்சனையாகத் தெரிகிறது, உண்மைதான். ஆனால், நான் சாட்சிக்கூண்டில் ஏறியபோது, 'உண்மையைத்தவிர வேறு எதையும் சொல்லமாட்டேன்' என்று உறுதிமொழி அளித்துள்ளேனே! பின்னர், எவ்விதம் நீங்கள் சொல்லும் உண்மைகளை நான் மறுக்கமுடியும்?" என்று அமைதியாகச் சொன்னார்.
ஒருவர் தன் உண்மையான நிலையை உணர்வதும், அதனை ஒளிவு மறைவின்றி ஒத்துக்கொள்வதும் பணிவுக்கு, தாழ்ச்சிக்கு எதிரானது அல்ல. இன்னும் சொல்லப்போனால், ஒருவர் தன் உண்மை நிலையை, அளவுக்கு அதிகமாய் மிகைபடுத்திச் சொல்வது அகந்தையாக மாறும். அதேபோல், தன் உண்மை குணங்களை மறைத்து, அவை ஒன்றுமில்லை என்று திரித்துச் சொல்வதும் போலியான தாழ்ச்சியாகிவிடும்.

தாழ்ச்சியான, பணிவான மனமே வாழ்வில் நிம்மதி அடைய அடிப்படைத் தேவை என்று சென்றவாரம் நாம் திருப்பாடல் 131ல் நமது தேடலை ஆரம்பித்தோம். இன்று தொடர்கிறோம்.
மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் அவரவர் உண்மை நிலையை உணர்வதுதான் உலகிலேயே மிக உயர்ந்த ஞானோதயம், அறிவு ஒளி என்று பல சமயங்கள் சொல்கின்றன. அந்த உண்மை நிலையில் தன்னைக் காத்து, வளர்த்துவருவது தன் சொந்தமுயற்சி அல்ல, அது இறைவனின் அருள் என்பதையும் ஒருவர் உணர்ந்துவிட்டால், அது மிக உன்னதமான அறிவொளி பெற்ற நிலை. அதுவே உண்மையான பணிவு, தாழ்ச்சி.

"ஆண்டவரே! என் உள்ளத்தில் இறுமாப்பு இல்லை; என் பார்வையில் செருக்கு இல்லை; எனக்கு மிஞ்சின அரிய, பெரிய, செயல்களில் நான் ஈடுபடுவதில்லை."
திருப்பாடல் 131ன் இந்த ஆரம்ப வார்த்தைகளில் இருந்த ஆழத்தைச் சென்ற விவிலியத் தேடலில் புரிந்துகொள்ள முயன்றோம். இன்றும் தொடர்கிறோம். இந்த வரிகளைச் சொன்னது மன்னன் தாவீது என்பதை உணரும்போது, நமது சிந்தனைகள் ஆழப்படுகின்றன.
ஆடுகளை மேய்க்கும் எளியச் சிறுவனான தாவீதை இறைவன் அரசனாகத் தேர்ந்தெடுத்தார். அரசராகத் தெரிவு செய்யப்பட்ட நாள் முதல் தாவீது சந்தித்தப் பிரச்சனைகள் ஏராளம், ஏராளம். போராட்டங்கள், பிரச்சனைகள், துன்பங்கள் என்ற நெருப்புச் சூளையில் தாவீது என்ற பொன் புடமிடப்பட்டபோது, அவர் ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொண்டார். அதாவது, தன் சொந்த அறிவையும், திறனையும் மட்டும் கொண்டு பெரிதாக எதையும் சாதிக்கமுடியாது என்பதே அந்தப் பாடம். நம் அனைவரின் வாழ்வுக்கும் தேவையான சிறந்ததொரு பாடம் இது. இஸ்ரயேல் மன்னர்களிலேயே மிக அதிகப் புகழ்பெற்ற தாவீது, துன்பங்கள் வழியாகத் தான் கற்றுக்கொண்ட பாடங்களைத்தான் இந்தப் பாடலில் கூறியுள்ளார். அவர் கூறும் இந்த வார்த்தைகளைக் கேட்கும்போது, இஸ்ரயேல் மக்களின் மற்றொரு மாபெரும் தலைவர் நம் நினைவுக்கு வருகிறார். அவர்தான் மோசே.

மோசே, யூத குலத்தில் பிறந்தவர் என்றாலும், சூழ்நிலை காரணமாக எகிப்து மன்னரின் வளர்ப்புப் பிள்ளையாக அரண்மனையில் வளர்ந்தார். கல்வி, கலை, வீரம் என்ற அனைத்துத் துறைகளிலும் சிறந்தவராக இருந்தார். மோசே எகிப்து நாட்டின் கலைகள் அனைத்தையம் பயின்று சொல்லிலும் செயலிலும் வல்லவராய்த் திகழ்ந்தார். (திருத்தூதர் பணிகள் 7: 22) என்று திருத்தூதர் பணிகள் நூலில் நாம் வாசிக்கிறோம்.
அனைத்துத் திறமைகளையும் பெற்றிருந்த மோசே, தன் சொந்தத் திறமையால் இஸ்ரயேல் மக்களின் விடுதலையைப் பெற்றுவிடலாம் என்று கனவு காண்கிறார். அந்தக் கனவின் தூண்டுதலால், தன் திறமைகள் மீது கொண்டிருந்த நம்பிக்கையால், தன் இனத்தவர் ஒருவரைக் கொடுமைப்படுத்திய எகிப்திய வீரன் ஒருவரை தன் கையால் கொன்றார். இதன் விளைவாக, அவர் எகிப்து நாட்டைவிட்டு ஓடிப்போய், மிதியான் நாட்டில் 40 ஆண்டுகள் மறைந்து வாழ வேண்டியிருந்தது.
எகிப்தின் இளவரசனைப்போல் வாழ்ந்துவந்த மோசே... தன்னுடைய அறிவுத்திறன், உடல் வலிமையைக் கொண்டு இஸ்ரயேல் மக்களை மீட்கமுடியும் என்று எண்ணிவந்த மோசே, நாற்பது ஆண்டுகள் யாரும் அறியாத ஒரு பாலை நிலத்தில் எளிய வாழ்வை மேற்கொண்டார். அந்த வாழ்வுக்குப்பின், அவர் இஸ்ரயேல் மக்களின் விடுதலை வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மோசே எப்போது அரிய பெரிய செயல்களில் தன்னையே ஈடுபடுத்திக் கொள்ளவில்லையோ, அப்போது இறைவன் அவரை ஒரு பெரும் தலைவனாக உயர்த்தினார். இந்த வரலாற்றை நன்கு அறிந்திருந்த மன்னன் தாவீது, ஆண்டவரே! எனக்கு மிஞ்சின அரிய, பெரிய, செயல்களில் நான் ஈடுபடுவதில்லை என்று தன் உண்மை நிலையை இறைவனிடம் சொல்கிறார்.

எவ்வளவுக்கு எவ்வளவு ஒருவர் தன்னையே மறந்துவாழ முன்வருகிறாரோ, அவ்வளவுக்கு அவ்வளவு இறைவன் அவரை உயர்த்துவார் என்பதை விவிலியம் மீண்டும் மீண்டும் நமக்குச் சொல்கிறது. இதே பாணியில் வாழ்ந்த திருமுழுக்கு யோவானும் நம் நினைவுக்கு வருகிறார். இயேசு வளர வேண்டும் தான் மறைய வேண்டும் (யோவான் 3: 30) என்பதே யோவானின் வாழ்வை இயக்கிய விருதுவாக்கு.

மோசே, தாவீது, யோவான் என்ற இந்த வரிசையில், இறுதியாக நம் எண்ணங்களை நிறைப்பவர் புனித பவுல் அடிகளார். கிறிஸ்துவ மறையை வேரோடு அழிக்க எண்ணி புறப்பட்ட சவுலைத் தடுத்தாட்கொண்டு, அவரைப் பவுலாக மாற்றியவர் கிறிஸ்து. தனது அறிவுத் திறன், மற்றும் தான் பிறந்த மேலான குலத்தின் பின்னணி இவற்றைக் கொண்டு சவுல் சாதிக்க நினைத்ததெல்லாம் கிறிஸ்துவின் சீடர்களை அழிப்பது ஒன்றே. ஆனால், இயேசுவால் அவர் ஆட்கொள்ளப்பட்டு, பவுலாக மாறியபின், தன் சொந்தத் திறன் எதுவும் இல்லை என்பதை புரிந்துகொண்டு, ஆக்கப்பூர்வமான பணிகளில் முழுமையாக ஈடுபட்டார். தன்னைப்பற்றி பெருமை பாராட்டுவதற்கு என்ன உள்ளது என்பதை அவர் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்தில் அழகாக விவரித்துள்ளார்:
கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் 12 1-10
என் வலுவின்மையே எனக்குப் பெருமை... 7 எனக்கு அருளப்பட்ட ஒப்புயர்வற்ற வெளிப்பாடுகளால் நான் இறுமாப்பு அடையாதவாறு பெருங்குறை ஒன்று என் உடலில் தைத்த முள் போல் என்னை வருத்திக் கொண்டே இருக்கிறது. 8 அதை என்னிடமிருந்து நீக்கிவிடுமாறு மூன்று முறை ஆண்டவரிடம் வருந்தி வேண்டினேன்.9 ஆனால் அவர் என்னிடம், என் அருள் உனக்குப் போதும்: வலுவின்மையில்தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும் என்றார். ஆதலால் நான் என் வலுவின்மையைப் பற்றித்தான் மனமுவந்து பெருமை பாராட்டுவேன். அப்போது கிறிஸ்துவின் வல்லமை என்னுள் தங்கும்.10 ஆகவே என் வலுவின்மையிலும் இகழ்ச்சியிலும் இடரிலும் இன்னலிலும் நெருக்கடியிலும் கிறிஸ்துவை முன்னிட்டு நான் அகமகிழ்கிறேன். ஏனெனில் நான் வலுவற்றிருக்கும்போது வல்லமை பெற்றவனாக இருக்கிறேன்.

கிறிஸ்தவ மறையின் வரலாற்றில் மோசே, தாவீது, திருமுழுக்கு யோவான், பவுலைப் போல தங்களையே மறைத்து இறைவனின் செயல்களை வெளிப்படுத்தியவர்கள் பலர் உள்ளனர். இவர்களில் பலரை நமக்குத் தெரியாது. இதோ, 'உங்களுக்குத் தெரியுமா?' என்ற பாணியில் ஒரு சில கேள்விகள்:

இது அறிவு வளர்க்கும் போட்டிக்காக எழுப்பப்படும் கேள்விகள் அல்ல. இதுபோன்ற கேள்விகளுக்கு எளிதில் விடைகள் கிடைக்காது. இந்த அற்புத மனிதர்கள் தலைமுறைகளால் மறக்கப்பட்டிருக்கலாம். ஆனால், இவர்கள் இல்லாமல் கிறிஸ்தவப் பாரம்பரியம் இவ்வளவு புகழ் பெற்றிருக்குமா என்பது சந்தேகம்தான்.

இவர்கள் அனைவரிடமும் நாம் காணும் ஒரு பொதுவான அம்சம்... தங்கள் பெயர் வரலாற்றில் பதியவேண்டும் என்பதல்ல, தங்கள் வழியாக வரலாற்றில் நன்மைகள் நிகழ்ந்தால் போதும் என்ற நல்லெண்ணத்துடன் வாழ்ந்து, மறைந்த அற்புத மனிதர்கள் இவர்கள்.
இவ்வுலகில் நம் பெயர் நிலைக்க வேண்டும் என்பது முக்கியமல்ல, நன்மைகள் நிலைத்தால் போதும் என்று வாழ்ந்த, மோசே, தாவீது, திருமுழுக்கு யோவான், பவுல் இன்னும் பல கோடான கோடி நல்ல உள்ளங்களுடன் நம்மையும் இணைத்துக்கொள்ள முயல்வோம்.
திருப்பாடல் 131ன் அடுத்த வரியில் காணப்படும், "ஆண்டவரே! என் நெஞ்சம் நிறைவும் அமைதியும் கொண்டுள்ளது; தாய்மடி தவழும் குழந்தையென என் நெஞ்சம் என்னகத்தே அமைதியாயுள்ளது." என்ற வார்த்தைகளில் நமது தேடல் தொடரும்.








All the contents on this site are copyrighted ©.