சிரியாவில் வேதிய ஆயுதங்கள் பயன்படுத்தக்கூடிய வாய்ப்பு உள்ளது, பான் கி மூன் கவலை
ஜூலை,24,2012. சிரியாவில் இடம்பெற்று வரும் கடும் சண்டையில் வேதிய ஆயுதங்கள் பயன்படுத்தக்கூடிய
வாய்ப்பு இருப்பதாகவும், அனைத்துலகச் சமுதாயம் சிரியாவின் நிலைமையை உன்னிப்பாய்க் கவனித்து
வருமாறும் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கேட்டுக் கொண்டார். வேதிய ஆயுதங்கள் போன்ற
பெரும் அழிவை ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்களைப் பயன்படுத்த யாராவது நினைத்தால், அது கடுமையாகக்
கண்டிக்கத்தக்கது என்றும் பான் கி மூன் கூறினார். OPCW என்ற வேதிய ஆயுதங்கள் தடை நிறுவனத்தில்
சிரியா உறுப்பினர் இல்லை என்பதையும் கவலையோடு குறிப்பிட்ட அவர், வெளிநாட்டுத் தாக்குதலுக்கு
எதிராக வேதிய மற்றும் உயிரியல் ஆயுதங்களை சிரியா பயன்படுத்தும் என்று சிரியா அரசு எச்சரித்து
வருவதையும் குறிப்பிட்டார். சிரியா அரசுத்தலைவர் Bashar al-Assadக்கு எதிராக சுமார்
16 மாதங்களாக இடம்பெற்று வரும் கடும் சண்டையில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.