இந்தோனேசியாவின் Aceh பகுதியில் உள்ள நான்கு கத்தோலிக்கக் கோவில்களில் தாக்குதல்கள்
ஜூலை,23,2012. இந்தோனேசியாவில் சிறுபான்மை மதங்களுக்கு உரிய மதிப்பு வழங்கப்படவில்லை
என்றும், இதனால், அம்மதங்களைச் சார்ந்தவர்களுக்குப் பாதுகாப்பும் வழங்கப்படுவதில்லை என்றும்
அந்நாட்டின் கிறிஸ்தவத் தலைவர்கள் கூறினர். கடந்த மூன்று மாதங்களாக இந்தோனேசியாவின்
Aceh பகுதியில் உள்ள நான்கு கத்தோலிக்கக் கோவில்கள் உட்பட 20 கிறிஸ்தவக் கோவில்கள் பல்வேறு
தாக்குதல்களுக்கு உள்ளாகி வந்துள்ளன. இத்தாக்குதல்கள் குறித்து காவல்துறைக்குப் புகார்கள்
அளிக்கப்பட்டபோதும், காவல்துறையினர் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது
ஏமாற்றத்தையும் வேதனையையும் தருகிறதென்று வட சுமத்ரா கூட்டமைப்பு என்ற அணியினர் இத்திங்களன்று
அறிக்கை ஒன்றை அரசுக்குச் சமர்ப்பித்துள்ளனர். இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்களால்
தொடர்ந்து நிகழ்ந்துவரும் இந்த வன்முறைகளால், அப்பகுதியில் உள்ள பல கிறிஸ்தவ ஆலயங்கள்
தங்கள் வழிபாடுகளை நிறுத்திவிட்டு, ஆலயங்களை மூடி வைத்துள்ளனர் என்று ஆசிய செய்தி நிறுவனம்
கூறியுள்ளது.