ஜூலை,20,2012. இறையியலுக்கும் கலாச்சாரத்துக்கும் இடையே தொடர்பை உருவாக்குவதற்கு அயராது
உழைப்பவர்க்கென வழங்கப்படும் “இராட்சிங்கர் விருதை”, வருகிற அக்டோபர் 20ம் தேதியன்று
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வழங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற அக்டோபர்
7ம் தேதி முதல் 28ம் தேதி வரை வத்திக்கானில் நடைபெறவிருக்கும் புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி
குறித்த 13வது உலக ஆயர்கள் மாமன்றத்தின்போது இவ்விருது திருத்தந்தையால் வழங்கப்படும். “நொபெல்
இறையியல் விருது” என அழைக்கப்படும் இவ்விருது, “ஜோசப் இராட்சிங்கர் – 16ம் பெனடிக்ட்”
என்ற நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. திருத்தந்தையோடு ஆழமான ஒன்றிப்புணர்வு கொண்டு, உண்மையின்
மேன்மையை உலகுக்கு அறிவிப்பதற்குப கடின முயற்சிகள் எடுப்பவர்களுக்கு இந்நிறுவனத் தலைவர்
பேரருட்திரு Giuseppe Antonio Scotti இவ்விருது நாளில் நன்றி சொல்வார் எனவும் சொல்லப்பட்டுள்ளது.
நூல்களை வெளியிடுவதிலும் அறிவியல் ஆய்வுகளிலும் சிறப்பாகப் பங்காற்றி வரும் வல்லுனர்களுக்கு
இவ்விருது வழங்கப்படுகிறது. இது 87 ஆயிரம் டாலர் ரொக்கப் பரிசைக் கொண்டது. இவ்விருது
கடந்த ஆண்டில் முதன்முறையாக வழங்கப்பட்டது.