சிரியாவில் உள்ள மதத் தலைவர்கள் உண்மைகளை எடுத்துரைக்க தயங்கக்கூடாது
ஜூலை,19,2012. சிரியாவில் சிந்தப்படும் இரத்தம் மதிக்கப்பட வேண்டும் என்றும், அந்நாட்டின்
தற்போதைய நிலை குறித்து மதத்தலைவர்கள் ஒளிவு மறைவின்றி பேசவேண்டும் என்றும் இயேசு சபை
அருள்தந்தை Paolo Dall'Oglio கூறினார். இத்தாலியரான அருள்தந்தை Paolo, 1982ம் ஆண்டு
முதல் 30 ஆண்டுகளாக சிரியாவில் கிறிஸ்தவ, இஸ்லாமிய உரையாடல்கள் பணியில் ஈடுபட்டவர். சிரியாவில்
நடைபெறும் வன்முறைகளுக்கு எதிராக இவர் ஐ.நா.தூதர் Kofi Annan அவர்களுக்கு ஒரு திறந்த
மடல் எழுதியதால், கடந்த மாதம் சிரியாவில் இருந்து வெளியேற்றப்பட்டார். தற்போது, உரோம்
நகரில் தங்கியிருக்கும் அருள்தந்தை Paolo, CNS என்ற கத்தோலிக்கச் செய்தி நிறுவனத்திற்கு
இப்புதனன்று அளித்த பேட்டியொன்றில் சிரியாவில் உள்ள மதத் தலைவர்கள் உண்மைகளை எடுத்துரைக்க
தயங்கக்கூடாது என்று கேட்டுக்கொண்டார். செப்டம்பர் மாதம் திருத்தந்தை லெபனான் நாட்டுக்கு
மேற்கொள்ளும் திருப்பயணம், சிரியாவின் வன்முறைகளுக்குத் தகுந்த ஒரு தீர்வு காண சிறந்ததொரு
தருணமாக அமையும் என்ற தன் நம்பிக்கையையும் அருள்தந்தை Paolo தன் பேட்டியில் வெளியிட்டார்.