பேராயர் மச்சாடோ : இந்தியாவுக்கும் விசுவாச ஆண்டு அவசியம்
ஜூலை 17,2012. விசுவாச ஆண்டு குறித்த "Porta Fidei" என்ற திருத்தந்தையின் அப்போஸ்தலிக்கக்
கடிதம், இந்தியச் சூழலிடம் நேரிடையாகப் பேசுவதாக இருக்கின்றது என்று நாசிக் ஆயர் பேராயர்
Felix Machado கூறினார். இந்தியாவில் பரவலாக விசுவாசம் குறைவுபடுவதைக் காண முடிகின்றது
என்று ஆசிய செய்தி நிறுவனத்திடம் உரைத்த பேராயர் மச்சாடோ, விசுவாசம் குன்றியுள்ள சூழலுக்கு
விசுவாச ஆண்டு ஒரு கொடையாகவும், பல்சமய உரையாடலுக்கு இவ்வாண்டு உந்துதலாகவும் இருக்கின்றது
எனவும் கூறினார். விசுவாச ஆண்டைச் சிறப்பிப்பது குறித்துப் பேசிய பேராயர், தனது நாசிக்
மறைமாவட்டத்தில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்களின் விசுவாச
அறிக்கையும், "Porta Fidei" என்ற திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் அப்போஸ்தலிக்கக்
கடிதமும் கொடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும்
கிறிஸ்துவின் ஒளியைப் பின்பற்றி நமது விசுவாச விளக்கை ஏற்றுவதற்கு அழைக்கப்பட்டிருக்கிறோம்
என்றும் பேராயர் கூறினார்.