கார்மேல் துறவு சபை சீர்திருத்தம் அடைந்த 450ம் ஆண்டு நிறைவு குறித்த திருத்தந்தையின்
சிந்தனைகள்
ஜூலை 17,2012. புதிய நற்செய்தி அறிவிப்புப்பணியைத் தொடங்குவதற்குத் தற்போது திருஅவையில்
எடுக்கப்பட்டுவரும் முயற்சிகளுக்கு 16ம் நூற்றாண்டு புனித அவிலா தெரேசா எடுத்துக்காட்டாய்
இருக்கின்றார் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார். ஆன்மீக விழுமியங்களில்
பின்னடைவு காணப்பட்ட அன்றைய உலகில் புனித அவிலா தெரேசா செய்த சீர்திருத்தத்தின் இலக்கும்,
அவர் புதிய துறவு மடங்களை உருவாக்கியதும் செபத்தோடு அப்போஸ்தலப் பணியைப் பாதுகாக்கும்
நோக்கத்தைக் கொண்டிருந்தன என்றும் திருத்தந்தை கூறினார். இஸ்பெயின் நாட்டு புனித அவிலா
தெரேசா கார்மேல் சபையில் செய்த சீர்திருத்தத்தின் தொடக்கத்தைக் குறித்து நிற்கும் அவிலா
நகர் புனித வளன் துறவு இல்லம் ஆரம்பக்கப்பட்டதன் 450ம் ஆண்டு நிறைவையொட்டி அவிலா ஆயர்
Jesus Garcia Burillo வுக்குக் கடிதம் அனுப்பியுள்ள திருத்தந்தை இவ்வாறு கூறியுள்ளார்.
16ம் நூற்றாண்டைப் போலவே இன்றும் தீவிர மாற்றங்களுக்கு மத்தியிலும் அப்போஸ்தலத்துவப்
பணிக்குச் செபமே முக்கியம் என்பதில் நம்பிக்கை வைக்க வேண்டும், இதன்மூலம் இயேசு கிறிஸ்துவின்
மீட்பளிக்கும் செய்தி தெளிவாகவும் செயல்திறத்துடனும் ஒலிக்கும் என்றும் திருத்தந்தை தனது
கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.