இலங்கையில் 43 ஆயிரம் வீடுகள் கட்டித்தர இந்தியா ஒப்பந்தம்
ஜூலை16,2012. இலங்கையில் போரின்போது வீடுகளை இழந்த 43 ஆயிரம் தமிழர்களுக்கு வீடுகளைக்
கட்டித்தர, இந்தியா இசைவு தெரிவித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில், கடந்த
2009ம் ஆண்டு, இராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே சண்டை நடந்தபோது, 2 இலட்சத்துக்கும்
அதிகமான தமிழர்கள், வீடுகளை இழந்து, அகதிகள் முகாமுக்குச் சென்றனர். விடுதலை புலிகளுடனான
சண்டை, முடிவுக்கு வந்துள்ள நிலையில், தமிழர்கள் வாழும் பகுதிகளில் மறுசீரமைப்புப் பணிகள்
நடந்து வருகின்றன. இதற்கிடையே, தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகளைக் கட்டித்தர இந்தியா
உறுதியளித்தது. இதன் ஒரு கட்டமாக, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மூன்று மாவட்டங்களில்
ஏற்கனவே ஆயிரம் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. இந்நிலையில், வடகிழக்கு மாவட்டங்களில்,
43 ஆயிரம் வீடுகளை 1,500 கோடி ரூபாய்ச் செலவில், கட்டித் தருவதற்குரிய ஒப்பந்தம், கடந்த
வாரத்தில் கொழும்புவில் கையெழுத்தாகியுள்ளது.