பிலிப்பீன்சில் நற்செய்தி அறிவிக்கப்பட்டதன் 500ம் ஆண்டுக் கொண்டாட்டங்கள் : ஆயர்கள்
அறிவிப்பு
ஜூலை14,2012. பிலிப்பீன்சில் முதன்முதலில் நற்செய்தி அறிவிக்கப்பட்டதன் 500ம் ஆண்டு நிறைவை
2021ம் ஆண்டில் கொண்டாடுவதற்கு கத்தோலிக்கரைத் தயாரிக்கும் நோக்கத்தில் மேய்ப்புப்பணி
அறிக்கையை வெளியிட்டுள்ளனர் அந்நாட்டு ஆயர்கள். “புதிய நற்செய்திப்பணி” என்ற தலைப்பில்
பிலிப்பீன்ஸ் ஆயர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2021ம் ஆண்டு மார்ச் 16ம் தேதி சிறப்பிக்கப்படவிருக்கும்
இவ்விழாவுக்குத் தயாரிப்பாக 9 ஆண்டுத் திட்டமும் குறிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த
விசுவாசப் பயிற்சி, பொதுநிலையினர், ஏழைகள், நற்கருணையும் குடும்பமும், பங்குத்தளம், குருக்களும்
துறவியரும், இளையோர், கிறிஸ்தவ ஒன்றிப்பும் பல்சமய உரையாடலும், மறைஅறிவிப்புப்பணி ஆகிய
தலைப்புக்களில் 2013ம் ஆண்டிலிருந்து தயாரிப்புகள் தொடங்கும் என ஆயர்கள் அவ்வறிக்கையில்
குறிப்பிட்டுள்ளனர். 2021ம் ஆண்டில் சிறப்பிக்கப்படவிருக்கும் இந்த ஜூபிலி ஆண்டானது
பிலிப்பீன்ஸ் திருஅவைக்கு அருளும் ஆசீர்வாதங்களும் நிறைந்த காலமாக இருக்கும் என்றும்
ஆயர்களின் அறிக்கை கூறுகின்றது. ஜூபிலி ஆண்டுக்கானத் தயாரிப்புக்களை வருகிற அக்டோபர்
21ம் தேதியன்று துவங்குகின்றது பிலிப்பீன்ஸ் திருஅவை