திருப்பீடத் தூதர் : சிரியாவில் இரத்தம் சிந்தப்படுவதை நிறுத்துவதற்குப் பன்னாட்டுச்
சமுதாயம் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்
ஜூலை14,2012. சிரியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் வன்முறையை நிறுத்துவதற்குப் பன்னாட்டுச்
சமுதாயம் நடவடிக்கை எடுக்குமாறு வருந்திக் கேட்டுள்ளார் சிரியாவுக்கானத் திருப்பீடத்
தூதர் பேராயர் Mario Zenari. அரசுக்கும் புரட்சிப்படைகளுக்கும் இடையே இடம்பெறும் மோதல்கள்
நாடு முழுவதும் பரவியுள்ளன என்றும், அப்பாவி குடிமக்களுக்குரிய பாதுகாப்பு மோசமடைந்து
வருகின்றது என்றும் பேராயர் Zenari கவலை தெரிவித்தார். இவ்வெள்ளியன்று Hama மாநிலத்தின்
Tremseh கிராமத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 200க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளவேளை, சிரியா
விவகாரத்தில் பன்னாட்டுச் சமுதாயம் பிளவுபட்டு இருந்தால் நிலைமை மேலும் மோசமாகும் என்று
எச்சரித்துள்ளார் பேராயர் Zenari. ஐ.நா.பாதுகாப்பு அவை உறுப்பினர்கள், குறிப்பாக,
சீனாவும் இரஷ்யாவும், இன்னும், அரபு கூட்டமைப்பும் தங்களுக்கிடையேயான வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு
சிரியாவில் வன்முறைகளை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கெஞ்சிக் கேட்டுள்ளார் பேராயர்
Zenari. சிரியாவில் கடந்த 16 மாதங்களாக இடம்பெற்று வரும் வன்முறைகளில் சுமார் 14 ஆயிரம்
பேர் இறந்துள்ளனர்.