மாற்றுத்திறனாளிச் சிறார்கள் அதிகமாக வன்முறைகளை எதிர்நோக்குகின்றனர் – ஐ.நா.
ஜூலை13,2012. உலகில் மாற்றுத்திறனாளிச் சிறார்கள், மற்ற சிறார்களைவிட ஏறக்குறைய நான்கு
மடங்கு வன்முறைகளை அதிகம் எதிர்நோக்குகின்றனர் என்று WHO என்ற உலக நலவாழ்வு நிறுவனம்
கூறியது. The Lancet என்ற மருத்துவ இதழில் வெளியான தகவலை வைத்து இவ்வாறு கூறிய WHO
நிறுவனம், மாற்றுத்திறனாளிச் சிறாரின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கு உடனடி நடவடிக்கைகள்
எடுக்கப்படுமாறு வலியுறுத்தியுள்ளது. மாற்றுத்திறனாளிச் சிறார்கள் மற்ற சிறாரைவிட
எல்லாவிதமான வன்முறைகளாலும் 3.7 மடங்கும், உடல்ரீதியாக 3.6 மடங்கும், பாலியல் ரீதியாக
2.9 மடங்கும் அதிகமாக பாதிக்கப்படுவதாக The Lancet மருத்துவ இதழ் சுட்டிக் காட்டியுள்ளது.ஃபின்லாந்து,
பிரான்ஸ், இஸ்ரேல், இஸ்பெயின், சுவீடன், பிரிட்டன், அமெரிக்க ஐக்கிய நாடு போன்ற வருவாய்
அதிகமுள்ள நாடுகளில் உள்ள 18,374 மாற்றுத்திறனாளிச் சிறார்கள் உட்பட, பல நாடுகளில் எடுத்த
17 ஆய்வுகளில் இவ்வாறு தெரிய வந்துள்ளதாக அவ்விதழ் கூறியுள்ளது.