2012-07-11 15:18:23

அருள்பணி என்ற கொடையைப் பேணிக் காப்பதில் குருக்கள் தாராள மனதுடன் செயல்படவேண்டும் - கர்தினால் Fernando Filoni


ஜூலை,11,2012. காங்கோ நாட்டில், கத்தோலிக்கர்களின் வாழ்வைப் பேணி வளர்ப்பதுடன், மற்றவர்களின் கலாச்சார, சமுதாயத் தளங்களில் தங்கள் எண்ணங்களை புதிய வழிகளில் விதைக்க குருக்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
கடந்த வாரம் காங்கோ குடியரசில் பயணம் மேற்கொண்ட திருப்பீட புதிய நற்செய்திப் பணி அவையின் தலைவர் கர்தினால் Fernando Filoni, அந்நாட்டு குருக்களுக்கு அளித்த இறுதி உரையில், படைப்பாற்றல் மிக்க வழிகளில் நற்செய்தியை பரப்பும்படி அவர்களைக் கேட்டுக்கொண்டார்.
திருஅவையில் உள்ள கத்தோலிக்கர்களின் தரம் அருள் பணியாளர்களின் தரத்தைப் பொறுத்தே இருக்கும் என்று கூறிய கர்தினால் Filoni, எனவே, குருக்கள் வெறும் வாய் வார்த்தைகளால் நற்செய்தியைப் போதிப்பது மட்டும் போதாது என்றும், தங்கள் வாழ்விலும் நற்செய்தியை வாழ்பவர்களாக இருக்கவேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.
அருள்பணி என்பது இறைவன் வழங்கியக் கோடை என்று குருக்களுக்கு நினைவுறுத்திய கர்தினால் Filoni, இக்கொடையைப் பேணிக் காப்பதில் குருக்கள் தாராள மனதுடன் செயல்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.








All the contents on this site are copyrighted ©.