பிரேசில் கர்தினால் Eugênio Sales de Araújo இறையடி சேர்ந்தார், திருத்தந்தை இரங்கல்
ஜூலை10,2012. இச்செவ்வாயன்று மரணமடைந்த பிரேசில் நாட்டு ரியோ டி ஜெனிரோவின் முன்னாள்
பேராயர் கர்தினால் Eugênio Sales de Araújoவின் இழப்புக்கு இரங்கல் தெரிவிக்கும் தந்தியை
அனுப்பியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். ரியோ டி ஜெனிரோவின் பேராயர் Dom Orani
Joao Tempestaவுக்குத் திருத்தந்தை அனுப்பியுள்ள தந்திச் செய்தியில், இறந்த கர்தினாலின்
ஆன்மா நிறைசாந்தியடைய செபிப்பதாகக் குறிப்பிட்டுள்ளதோடு, அவர் தலத்திருஅவைக்கும் அகில
உலகத் திருஅவைக்கும் ஆற்றியுள்ள பணிகளைப் பாராட்டியுள்ளார். 91 வயதாகும் கர்தினால்
Eugênio Sales de Araújo வின் இறப்போடு திருஅவையில் மொத்த கர்தினால்களின் எண்ணிக்கை 208
ஆகவும், இதில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய 80 வயதுக்குட்பட்டவர்களின்
எண்ணிக்கை 121ஆகவும் குறைந்தன. உலகில் பெரிய கத்தோலிக்க நாடான பிரேசிலில் தற்போது 9 கர்தினால்கள்
உள்ளனர். கர்தினால் Eugênio Sales de Araújo, திருத்தந்தை 6ம் பவுல் அவர்களால் 1969ம்
ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி கர்தினாலாக உயர்த்தப்பட்டார். 1920ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி
பிறந்த இவர், 1943ம் ஆண்டில் குருவாகவும், 1954ம் ஆண்டில் ஆயராகவும் திருநிலைப்படுத்தப்பட்டார்.
இவர் 1971ம் ஆண்டில் ரியோ டி ஜெனிரோ பேராயராக நியமிக்கப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேலாக
அங்கு மறைப்பணியாற்றியிருக்கிறார்.