ஜூலை09,2012. மறைஅறிவிப்புப்பணி குறித்த இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத் தீர்மானத்
தொகுப்புத் தயாரிப்பு ஆணையம், 1965ம் ஆண்டு மார்ச் 29 முதல் ஏப்ரல் 3 வரை கூட்டம் நடத்திய
“Ad Gentes” என்ற மையத்திற்கு இத்திங்களன்று சென்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். இத்தாலியின்
நேமி என்ற ஊரில் இறைவார்த்தை துறவு சபையினர் நடத்தும் இம்மையத்திற்கு காஸ்தெல் கந்தோல்போவிலிருந்து
காரில் சென்ற திருத்தந்தை, இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் மறைஅறிவிப்புப்பணி
குறித்த தீர்மானத் தொகுப்புக்கென 47 ஆண்டுகளுக்கு முன்னர் தான் பணி செய்த இடத்தை மீண்டும்
பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்தார். இம்மையத்தில், இறைவார்த்தை
துறவு சபையின் புதிய அதிபர் அருள்தந்தை Heinz Kulüke, முன்னாள் அதிபர் அருள்தந்தை Antonio
Pernia உட்பட பொதுப் பேரவையில் கலந்து கொண்ட சுமார் 150 பேரைத் திருத்தந்தை சந்தித்தார்.
மறைஅறிவிப்புப்பணி குறித்த இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத் தீர்மானத் தொகுப்புத்
தயாரிப்பு ஆணையத்தில் இளம் இறையியலாளராக திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பணி செய்தார் என்பது
குறிப்பிடத்தக்கது.