அருள்தந்தை லொம்பார்தி : இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்தின் பசுமையான
நினைவுகள்
ஜூலை07,2012. வருகிற அக்டோபரில் நாம் சிறப்பிக்கவிருக்கும் இரண்டாம் வத்திக்கான் பொதுச்
சங்கத்தின் 50ம் ஆண்டு நிறைவு, நாம் அனைவரும் ஆர்வமுடன் ஒன்றிணைந்து தூய ஆவிக்குச் செவிமடுக்கும்
சூழலை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குவதாக இருக்கும் என்று வத்திக்கான் தொலைக்காட்சி
மைய இயக்குனர் கூறினார். வத்திக்கான் தொலைக்காட்சியின் வார நிகழ்ச்சியில் இவ்வாறு
பேசிய அத்தொலைக்காட்சி மைய இயக்குனர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி, ஜூலை9ம்
தேதி வருகிற திங்களன்று இத்தாலியின் நேமி என்ற ஊரில் இறைவார்த்தை சபையினரின் இல்லத்துக்குத்
திருத்தந்தை செல்வதற்கான மற்றொரு காரணத்தையும் விளக்கினார். நேமியில் அத்துறவு சபைத்
தலைவர்களையும் மற்றவர்களையும் வாழ்த்துவதோடு, 1965ம் ஆண்டில் இளம் இறையியலாளராக இரண்டாம்
வத்திக்கான் பொதுச் சங்கம் குறித்த வேலைகளில் தான் ஈடுபட்டிருந்த அந்த இடத்தை மீண்டும்
பார்ப்பதற்காகவும் திருத்தந்தை அங்குச் செல்கிறார் என்று கூறினார் அருள்தந்தை லொம்பார்தி.