வருகிற அக்டோபர் 4ம் தேதி லொரேத்தோ செல்கிறார் திருத்தந்தை
ஜூன்30,2012. 13வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் பணிகளையும் விசுவாச ஆண்டையும் அன்னைமரியாவிடம்
அர்ப்பணிக்கும் நோக்கத்தில், வருகிற அக்டோபர் 4ம் தேதி திருத்தந்தை லொரேத்தோ செல்வார்
என்று, அந்நகர்ப் பேராயர் Giovanni Tonucci, இவ்வெள்ளி மாலை லொரேத்தோ பசிலிக்காவில் அறிவித்தார்.
இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் ஆரம்பத்தையொட்டி அருளாளர் திருத்தந்தை 23ம்
ஜான், லொரேத்தோவுக்கும் அசிசிக்கும் இரயிலில் திருப்பயணம் மேற்கொண்டதன் 50ம் ஆண்டின்
நிறைவாக, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வருகிற அக்டோபர் 4ம் தேதியன்று லொரேத்தோ செல்லவுள்ளார்
என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும், இம்முறை திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கெலிகாப்டரில்
செல்வார் என்றும் கூறப்பட்டுள்ளது. இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் தொடங்கியதன்
50ம் ஆண்டின் நிறைவாக, வருகிற அக்டோபர் 11ம் தேதி ஆரம்பமாகும் விசுவாச ஆண்டு, 2013ம்
ஆண்டு நவம்பர் 24ம் தேதி கிறிஸ்து அரசர் பெருவிழாவன்று நிறைவடையும். இத்தாலியிலுள்ள
லொரேத்தோவில் புகழ்பெற்ற “புனித இல்ல” அன்னைமரியாத் திருத்தலம் அமைந்துள்ளது.