2012-06-27 17:35:29

திருஅவையில் திருப்புமுனைகள் - வீரமாமுனிவர்


ஜூன்27,2012. எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பது தமிழர்களின் இடைவிடாத முழக்கம். ஆனால் இந்த முழக்கம் இக்காலத்தில் இப்படி இல்லையென்றாலும், பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழக மண்ணில் இயேசுவின் நற்செய்தியைப் போதித்த மேலை நாட்டவர் சிலரிடம் மிகச் சிறப்பாகவே ஒலித்திருக்கின்றது. கடந்த வாரம் நாம் கேட்ட தத்துவப் போதகர் என்ற இயேசு சபை அருள்தந்தை இராபர்ட் தெ நொபிலி, இந்த வாரம் நாம் கேட்கும் தைரியநாதன் அல்லது வீரமாமுனிவர் என்ற இயேசு சபை அருள்தந்தை கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி (Constantine Joesph Beschi) போன்றோர் மறைப்பணியோடு, தமிழுக்கும் தொண்டுகள் புரிந்துள்ளனர். இவ்விரு இத்தாலியர்களும் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிப்பதற்காகத் தமிழைக் கற்றவர்கள். இவர்கள் தமிழகத் திருஅவையில் மாபெரும் திருப்பத்திற்கு வித்திட்டவர்கள். 18ம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் சிறந்து விளங்கிய இயேசு சபை அருள்தந்தையரில் பெஸ்கியும் ஒருவர். அருள்தந்தை பெஸ்கி, தமிழ் மொழிக்கும் தமிழ் இலக்கியத்துக்கும் ஆற்றிய அரும்பணியை அங்கீகரிக்கும் விதமாக 1968ம் ஆண்டில் சென்னை மெரினா கடற்கரையில் இவருக்குச் சிலை எழுப்பியது அப்போதைய தமிழக அரசு.

இத்தாலியின் Mantova வுக்கு அருகிலுள்ள Castiglione delle Stiviere என்ற ஊரில் 1680ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி பிறந்த கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி, 1698ம் ஆண்டு இயேசு சபையில் சேர்ந்தார். உலக மொழிகளைக் கற்கும் ஆர்வத்தால் 30 வயதுக்குள் கிரேக்கம், இலத்தீன், போர்த்துக்கீசியம், ப்ரெஞ்ச், ஜெர்மானியம், ஆங்கிலம், ஈரானியம் உட்பட ஒன்பது மொழிகளில் தேர்ச்சி பெற்றார். இவர் ஐந்து ஆண்டுகள் இலக்கண ஆசிரியராகவும் பணிபுரிந்துள்ளார். தென்னிந்தியாவில் மதுரை மறைப்பணித்தளத்தில் பணி செய்ய விரும்பி அப்போதைய இயேசு சபை அதிபர் அருள்தந்தை மிக்கேல்ஆஞ்சலோ தாம்புரினி அவர்களிடம் அனுமதியும் பெற்று லிஸ்பன் சென்று கப்பலேறி, 1710ம் ஆண்டு கோவா வந்தடைந்தார். பின்னர் 1711ம் ஆண்டு மே மாதத்தில் மதுரை வந்து சேர்ந்தார். இவர் முதலில் ஆறு ஆண்டுகள் திருச்சிக்கு அருகிலுள்ள ஏலாக்குறிச்சியில் மறைப்பணியாற்றினார். பின்னர் காமநாயக்கன்பட்டியில் பங்குக் குருவாக இருந்தார். தமிழைக் கற்பதற்காக திருநெல்வேலி, இராமநாதபுரம், தஞ்சாவூர், மதுரை ஆகிய நகரங்களின் முக்கிய மையங்களுக்குச் சென்றார். 1714 மற்றும் 1715ம் ஆண்டுகளில் அடக்குமுறையை எதிர்நோக்கினார். ஓர் இந்து நண்பர் மூலமாக இவருக்கு வரவேண்டியிருந்த மரணதண்டனையிலிருந்து தப்பினார். இவர் கிறிஸ்தவ சமூகங்களைச் சந்திப்பதற்கு அப்பகுதி மன்னர் தடை விதித்தார். இது அவர் தமிழ் மொழியை நன்றாகக் கற்பதற்கு உதவியது. எழுத்து மூலம் மறைப்பணியாற்ற முடியும் என்பதைக் கண்டறிந்தார். இவர் சுப்பிரதீபக் கவிராயரிடம் தமிழ் இலக்கண, இலக்கியம் கற்று, இலக்கியப் பேருரைகள் நடத்துமளவுக்குப் புலமை பெற்றார்.

அக்காலத்தில் சீனாவில் இயேசு சபை குருக்கள் செய்த பண்பாட்டுமயமாக்கல் மறைப்பணியினால் தூண்டுதல் பெற்று அருள்தந்தை பெஸ்கியும் இந்திய வாழ்வுமுறையை ஏற்றார். இவர் அமைத்த கிறிஸ்தவத் திருவுருவங்களிலும், இவர் கட்டிய பூண்டி மாதா பசிலிக்கா, கோணான்குப்பம் பெரியநாயகி மாதா ஆலயம், ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை திருத்தலம் ஆகியவற்றிலும் இந்திய கலாச்சாரப் பின்னணி இருப்பதைக் காணலாம். காமநாயக்கன்பட்டியில் இவர் கட்டிய இரண்டு இரதங்களையும் இதற்கு எடுத்துக்காட்டாய்ச் சொல்லலாம். இவர் சந்நியாசி போன்று காவிநிற ஆடையையே உடுத்தினார். அத்துடன் இந்துமதத்தினரோடு நட்பைக் கொண்டிருந்தார். அதனால் கிறிஸ்தவர்களை அடக்குமுறைகளிலிருந்து காப்பாற்ற முடிந்தது. 12 ஆயிரம் பேருக்குத் திருமுழுக்குக் கொடுத்தார் என்று சொல்லப்படுகின்றது. 1738ம் ஆண்டு வரை தஞ்சாவூரில் மறைப்பணியாற்றிய பின்னர் 1740ம் ஆண்டில் கோரமண்டல கடற்கரைப் பகுதியில் இறப்புவரை வாழ்ந்தார். 1742ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி இறையடி சேர்ந்தார் அருள்தந்தை பெஸ்கி.

அருள்தந்தை பெஸ்கி, மறைப்பணியாளராக இருந்தாலும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், தமிழ் இலக்கியத்துக்கும் மாபெரும் பங்களிப்பை அளித்துள்ளார். காவியம், பிரபந்தம், உரைநடை அகராதி, இலக்கணம், மொழிபெயர்ப்பு என்று பலதுறைகளிலும் இவர் முத்திரை பதித்தவர். சதுரகராதி, ஆயிரம் சொற்களைக் கொண்ட தமிழ்-இலத்தீன், 4,400 சொற்களைக் கொண்ட இலத்தீன்-தமிழ்-போர்த்துக்கீசியம் உட்பட பல தமிழ் அகராதிகளை உருவாக்கினார். தொன்னூல் விளக்கம் என்ற நூலில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்களைத் தொகுத்தார். கொடுந்தமிழ் இலக்கணம் என்ற நூலில் தமிழில் முதல்முதலாகப் பேச்சுத்தமிழை விவரிக்க முனைந்தவர் இவர். வழக்கும் செய்யுளுமே ஒரு மொழியின் இலக்கணமாக அமையுமென்றாலும் இரட்டை வழக்கு மொழியான தமிழில் பேச்சுத்தமிழுக்கு இலக்கணம் அமைந்திராத காலத்தில் இவர் கொடுந்தமிழ் இலக்கணம் வகுத்தது சிறப்பான முயற்சி என்றே பாராட்ட வேண்டும். இந்நூல், கிறிஸ்தவம் தமிழ் மொழிக்குச் செய்த சிறந்த சேவைகளில் ஒன்றாக அமைந்துள்ளது.

வீரமாமுனிவர் என அழைக்கப்படும் இயேசு சபை அருள்தந்தை பெஸ்கி, தமிழின் சிறப்பை ஐரோப்பியர் உணருவதற்கு உதவியாக திருக்குறள், தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திசூடி போன்ற நூல்களை பிற ஐரோப்பிய மொழியில் வெளியிட்டார். இது ஐரோப்பிய அறிவாளர்களின் கண்களைத் திறந்தது. தமிழ் இலக்கியத்தின் உண்மை மற்றும் அழகை அவர்கள் கண்டுணர வாய்க்காலாகவும் இருந்தது. வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானக் கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம், பரமார்த்த குரு கதை, வாமன் கதை என 23 உரைநடை நூல்களைப் படைத்தவர். இதில் பரமார்த்த குரு கதையானது தமிழில் முதன்முதலாக வந்த ஹாஷ்ய இலக்கியமாகும். திருக்காவலூர்க் கலம்பகம், கித்தேரியம்மன் அம்மானை இவரது பிற நூல்கள் ஆகும். இவர் இயற்றிய வாடாத மாலை எனப் பொருள்படும் "தேம்பாவணி" மிகச்சிறந்த பெருங்காவியம் ஆகும். இவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்றாக உள்ள இந்தக் காவியம், மூன்று காண்டங்களில் 36 படலங்களைக் கொண்டு மொத்தமாக 3,615 விருத்தப்பாக்களால் ஆனது. இதிலும் ஒரு சிறப்பு இருக்கிறது. இதில் பின்னிணைப்பாக யாப்பு வடிவங்களை அளித்திருக்கிறார்.
வீரமாமுனிவர் இந்து மதத்தினரோடு உரையாடலில் ஈடுபட்டார். இந்துமதத்தில் பயன்படுத்தப்படும் சொற்களையும் கருத்துக்களையும் புராணங்களையும் இவர் பயன்படுத்தினார். இலக்கியச் சுவடிகளைப் பல இடங்கள் சென்று தேடி எடுத்ததால்; "சுவடி தேடும் சாமியார்" எனவும் அழைக்கப்பட்டார். இந்த இத்தாலியருக்கு ஒவ்வொரு தமிழரும் நன்றிக்கடன் பட்டுள்ளார்.







All the contents on this site are copyrighted ©.