ஒவ்வொரு இரண்டு நிமிடத்துக்கும் தாய்மைப்பேறு கொண்ட ஒரு பெண் இறக்கிறார் - ஐ.நா. பொதுச்செயலர்
ஜூன்,26,2012. தாய்மைப்பேறு கொண்ட பெண்களில், ஒவ்வொரு இரண்டு நிமிடத்துக்கும் ஒருவர்,
கருவுற்ற காலத்தில் அல்லது குழந்தை பிறப்பின்போது இறக்கிறார், இவர்களில் பெரும்பாலானோர்
வளர்இளம் சிறுமிகள் என்று ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் கூறினார். இப்பிரச்சனையைத்
தீர்க்க, 2010ம் ஆண்டில் பெண்கள் மற்றும் சிறாரின் நலவாழ்வு குறித்த வழிமுறைகள் உலக அளவில்
எடுக்கப்பட்டன என்றுரைத்த பான் கி மூன், நலவாழ்வு தொடர்புடைய மில்லென்ய இலக்குகளை ஊக்குவிக்க
வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். சரியான தகவல், சரியான தலையீடு போன்றவை மூலம்
இப்பெண்களின் உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்று, ஜெனீவாவில் கடந்த வாரத்தில் மனிதப்
பிறப்பு கொள்கை குறித்து நடைபெற்ற கூட்டத்திற்கு அனுப்பிய செய்தியில் ஐ.நா. பொதுச்செயலர்
கூறியுள்ளார். 2015ம் ஆண்டுக்குள் 1 கோடியே 60 இலட்சம் பெண்கள் மற்றும் சிறாரின் வாழ்வைப்
பாதுகாப்பதும், இன்னும் இலட்சக்கணக்கானவர்களின் வாழ்வை மேம்படுத்துவதும் தங்களது நோக்கம்
என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.