எகிப்து நாட்டின் புதிய அரசுத் தலைவருக்கு காப்டிக் ரீதி ஆர்த்தடாக்ஸ் திருஅவையின்
பேராயர் அனுப்பிய செய்தி
ஜூன்,25,2012. கடந்த 16 மாதங்களாய் எகிப்து நாடு கடந்துவந்த பிரச்சனைகள் நிறைந்த பாதையில்
ஒரு முக்கிய திருப்பமாக, அந்நாட்டின் அரசுத் தலைவரின் நியமனம் அமைந்துள்ளது என்று காப்டிக்
ரீதி ஆர்த்தடாக்ஸ் திருஅவையின் பேராயர் Angaelos கூறியுள்ளார். Muslim Brotherhood
கட்சியின் சார்பில் போட்டியிட்ட Mohammed Mursi என்பவர் அரசுத் தலைவர் போட்டியில் வெற்றிபெற்றுள்ளார்
என்று இஞ்ஞாயிறன்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பேராயர் Angaelosன் இவ்வறிக்கை இலண்டனில்
இருந்து வெளியானது. புதிய அரசுத்தலைவர், மக்களாட்சியில் நாட்டைத் தொடர்ந்து வழிநடத்தவும்,
பிளவுபட்டிருக்கும் மக்களை ஒன்று சேர்க்கவும் இறைவன் அவருக்குத் தேவையான ஞானத்தை வழங்க
வேண்டும் என்று பேராயர் தன் செய்தியில் கூறியுள்ளார். தங்கள் அயலவர் எந்த மதத்தையும்,
அரசியல் கட்சியையும் சார்ந்தவர்கள் என்பதில் எகிப்து மக்கள் அதிக கவனம் செலுத்தாமல்,
ஒருங்கிணைந்த நாட்டை உருவாக்க ஒவ்வொருவரும் என்ன செய்யமுடியும் என்பதில் கவனம் செலுத்துவதே
தற்போதையத் தேவை என்று காப்டிக் ஆர்த்தடாக்ஸ் திருஅவையின் தலைவர் பேராயர் Angaelos தன்
செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.