சமய சுதந்திரத்துக்காகப் போராட வேண்டும் : பேராயர் லோரி
ஜூன்23,2012. அமெரிக்கக் கலாச்சாரத்திலிருந்து மதத்தின் தாக்கத்தை அகற்ற முயற்சிக்கும்
சக்திகளுக்கு எதிராகக் கத்தோலிக்கர் போராட வேண்டுமென்று பால்டிமோர் பேராயர் வில்லியம்
லோரி கேட்டுக் கொண்டார். அமெரிக்க ஐக்கிய நாட்டில் சமய சுதந்திரத்துக்காகத் தொடங்கப்பட்டுள்ள
இரண்டு வாரப் போராட்டத்தின் துவக்கத் திருப்பலியில் இவ்வாறு கேட்டுக் கொண்ட பேராயர் லோரி,
திருஅவையின் போதனகளும், அந்நாட்டை உருவாக்கியபோது வெளியிடப்பட்ட ஏடுகளும் மனச்சான்றின்
சுதந்திரத்தை பலவழிகளில் அங்கீகரிக்கின்றன என்று கூறினார். செபம், சமய சுதந்திரத்தை
ஆதரித்துப் பேசும் கூட்டங்கள், இந்தச் சுதந்திரம் குறித்த கல்வியறிவு போன்ற நடவடிக்கைகள்,
இந்த இரண்டு வாரங்களில் அந்நாடு முழுவதும் ஆயர்களால் நடத்தப்படும். சமய சுதந்திரத்துக்கான
இந்த இரண்டு வார இந்நடவடிக்கை வருகிற ஜூலை 4ம் தேதியன்று நிறைவடையும்.