ஜூன்,20,2012 உரோம் நகரில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாகியுள்ளதால், திருத்தந்தை 6ம்
பவுல் மண்டபத்தில் இப்புதன் பொது மறைபோதகத்தைத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வழங்கினார்.
செபத்தைப் பற்றி புனித பவுல் கூறியுள்ள சிந்தனைகளைக் கடந்த வாரங்களில் சிந்தித்து வந்ததுபோல்
இவ்வாரமும் நாம் தொடர்ந்து சிந்திப்போம் என்று தன் மறைபோதகத்தைத் துவக்கினார் திருத்தந்தை.
எபேசியருக்கு எழுதியத் திருமுகத்தின் துவக்கத்தில் இறைவனைப் புகழ்ந்தும், இறை அசீரை
வேண்டியும் புனித பவுல் எழுதியுள்ள வார்த்தைகளை நாம் இன்று சிந்திப்போம். முடிவற்ற வாழ்வில்
நாம் பகிரவிருக்கும் நமது மீட்பின் திட்டத்தை கிறிஸ்துவின் வழியாக நமக்கு அறிவித்த இறைவனுக்கு
பவுல் அடியார் நன்றி கூறுகிறார். உலகம் உருவாவதற்கு முன்பே கிறிஸ்து வழியாகக் கடவுள்
விரும்பிச் செய்த தீர்மானமாக நம்மைத் தேர்ந்து, அவர் தமது திருவுளத்தின் மறைபொருளை நமக்குத்
தெரியப்படுத்தியுள்ளார். சிலுவையில் கிறிஸ்து சிந்திய இரத்தத்தின் வழியாக, நமது பாவங்களை
மன்னித்து, இறைவனுடன் நாம் மீண்டும் ஒப்புரவுகொள்ளச் செய்தார். தூய ஆவியாரை நமக்குக்
கொடையாக வழங்கி, உறுதியான மீட்புக்கு நம்மை உரிமையாக்கினார். கடவுள் நமக்களிக்கும் மீட்பின்
திட்டத்தை ஆழமாக தியானிக்கவும், அதன் பயனாக, இன்றையச் சூழலில் கடவுளின் மீட்புத் திட்டத்தை
நாம் கண்டுணரவும் புனித பவுலின் இந்தச் செபம் நமக்கு உதவுகிறது. மூவொரு இறைவன் நம் வாழ்வை
மாற்றியமைக்கவும், கிறிஸ்துவின் வழியாக நாம் அடையும் உரிமைப் பேற்றுக்காக நன்றி சொல்லவும்
நமது செபங்கள் வழியே முயல்வோம் என்று தன் மறைபோதகத்தை வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். தன்
மறைபோதகத்தின் இறுதியில் நைஜீரியாவில் நடைபெறும் வன்முறைகள் பற்றி எடுத்துரைத்து, அங்கு
அமைதி நிலவ வேண்டுகோள் விடுத்தார். அந்நாட்டில் நிகழும் வன்முறைகள் கிறிஸ்தவர்களுக்கு
எதிராகவே நிகழ்ந்து வருவதை தான் காணமுடிகிறது என்று அவர் கூறினார். இந்த வன்முறையைத்
தொடர்ந்து செய்துவரும் குழுக்கள் உடனடியாகத் தங்கள் வன்முறைகளைக் களையுமாறு திருத்தந்தை
கேட்டுக்கொண்டார். நைஜீரியாவின் அனைத்துத் தரப்பினரும் அமைதியான, ஒப்புரவான சமுதாயத்தைக்
கட்டியெழுப்புமாறு தன் வேண்டுகோளை விடுத்தார் திருத்தந்தை. இந்தோனேசியாவில் இருந்து
வந்திருந்த பல்சமய உறவுகள் குழுவினரையும், அமெரிக்காவில் இருந்து வந்திருந்த 'Wounded
Warriors' என்ற குழுவினரையும் தன் புதன் பொது மறைபோதகத்தின் இறுதியில் சிறப்பாக வாழ்த்தினார்
திருத்தந்தை. அதேபோல், ஸ்காட்லாந்து, ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, ஜப்பான், பாகிஸ்தான்
ஆகிய நாடுகளில் இருந்து வந்திருந்த பயணிகளை ஆங்கிலத்தில் வாழ்த்தினார். இறுதியில் அனைவருக்கும்
தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.