Rio+20 பூமிக்கோள உச்சிமாநாட்டிற்கு ஒரு முன்னோடியாக பாதுகாப்பான நகரங்கள்
பற்றிய ஒரு வரைவு திட்டம்
ஜூன்,19,2012. ரியோ டி ஜெனீரோவில் இப்புதனன்று துவங்கவிருக்கும் Rio+20 பூமிக்கோள உச்சிமாநாட்டிற்கு
ஒரு முன்னோடியாக, ஐ.நா.வின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பும், ரியோ டி ஜெனீரோ நகரும்
இணைந்து பாதுகாப்பான நகரங்கள் பற்றிய ஒரு வரைவு திட்டத்தை இத்திங்களன்று வெளியிட்டன. 5
இலட்சம் மக்கள் வாழக்கூடிய வகையில் அமைந்துள்ள இந்நகரில் இயற்கைச் சக்திகளைக் கொண்டு
எரிசக்தி உருவாக்கும் வசதிகள், இந்த வசதிகளைத் திறம்பட பயன்படுத்தும் கட்டிடங்களின் அமைப்பு,
நகரில் உருவாகும் கழிவுப் பொருட்களைச் சரிவரப் பயன்படுத்துதல் ஆகிய திட்டங்கள் அமைந்துள்ளன.
இத்திட்டங்கள் Rio+20 உச்சிமாநாட்டில் விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஐ.நா.வின்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு கண்டறிந்துள்ள கணக்கின்படி, 2050ம் ஆண்டிற்குள் உலகின்
80 விழுக்காடு மக்கள் நகரங்களில் வாழும் சூழல் உருவாகும் என்று தெரிகிறது. இத்திங்களன்று
வெளியான இப்புதிய நகரங்கள் திட்டம் செயல்படுத்தப்பட்டால், நகரங்களில் 30 விழுக்காடு தண்ணீரையும்,
50 விழுக்காடு எரிசக்தியையும் சேமிக்க முடியும் என்று கணிக்கப்படுகிறது.