ஜூன்,18,2012. இலங்கையின் வடபகுதி பாழடைந்து காட்சியளிக்கிறது என்று அண்மையில் அங்கு
பார்வையிட்டுத் திரும்பிய அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் உறுப்பினர்கள் கூறுகின்றனர்.
அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தருண் முகர்ஜி, தமிழக சட்டமன்ற உறுப்பினர் பி.வி.கதிரவன்
மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர் தேவராஜன் ஆகியோர் இலங்கை சென்று, அங்குள்ள இடதுசாரி
கட்சிகளின் தலைவர்கள் உட்பட பலரை சந்தித்து தமிழ் மக்களின் நலன்கள் குறித்து உரையாடியுள்ளனர். வட
இலங்கையில் சாலைகள் போடப்படும் பணிகள் விரைவாக நடைபெற்றுவந்தாலும், ஏனையப் பணிகளில் முன்னேற்றம்
ஏதும் ஏற்பட்டுள்ளதைத் தங்களால் காணமுடியவில்லை எனவும், மக்கள் இன்னும் அச்சம் நிறைந்த
சூழலிலேயே வாழ்ந்து வருகிறார்கள் என்பதைத் தாங்கள் உணர்ந்ததாகவும் தமிழக சட்டமன்ற உறுப்பினர்
பி.வி.கதிரவன் சுட்டிக்காட்டினார். இந்திய அரசு வழங்கும் நிதியுதவிகள்கூட தேவைப்படும்
மக்களுக்கு முழுமையாக கிடைக்காதச் சூழல் வட இலங்கையில் நிலவுவதாகவும், பல இடங்களில் மின்சார
இணைப்புகள் இல்லாத சூழலைத் தங்களால் கவனிக்க முடிந்தது எனவும் கதிரவன் தெரிவித்தார்.