மனிதர் உறுதியான வளர்ச்சியின் மையமாக வைக்கப்பட வேண்டும் – வத்திக்கான்
ஜூன்16,2012. உலகின் உறுதியான வளர்ச்சிக்கும் ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத்துக்கும்
மையமாக இருக்க வேண்டியவர்கள் மனிதர்கள் என்று, உறுதியான வளர்ச்சி குறித்த ஐ.நா. மாநாட்டுக்குச்
சமர்ப்பிக்கப்பட்டுள்ள திருப்பீட அறிக்கை கூறுகிறது. இம்மாதம் 20 முதல் 22 வரை பிரேசில்
நாட்டு ரியோ டி ஜெனிரோவில் நடைபெறவிருக்கும் உறுதியான வளர்ச்சி குறித்த ஐ.நா. மாநாட்டில்
தனது நிலையை வலியுறுத்தும் நோக்கத்தில் திருப்பீடம் சமர்ப்பித்துள்ள அறிக்கையில், உலக
மக்கள் சேர்ந்து வாழும் கலையைக் கற்றுக் கொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. மனிதருக்கும்
இயற்கைக்கும் இடையே ஓர் உடன்பாடு இல்லாத நிலையில் மனிதக் குடும்பம் அழிவையே சந்திக்கும்
எனக்கூறும் அவ்வறிக்கை, உறுதியான வளர்ச்சியில் மனிதர்க்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட
வேண்டும் என்று ரியோ உச்சி மாநாட்டில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் கவனத்தில் எடுக்கப்பட
வேண்டும் என வலியுறுத்துகிறது. 20 ஆண்டுகளுக்கு முன்னர் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற
அனைத்துலக பூமி மாநாட்டின் தொடர்ச்சியாக, தற்போது ரியோ+20 என்ற மாநாடு நடைபெறவிருக்கின்றது.