சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பணம் ரூ.12 ஆயிரத்து 740 கோடியாக அதிகரிப்பு
ஜூன்15,2012. சுவிட்சர்லாந்து வங்கிகளில் இந்தியர்கள் சேமித்து வைத்துள்ள பணம், 2011ம்
ஆண்டின் இறுதியில், 12 ஆயிரத்து 740 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில்
இப்போதுதான் முதன்முறையாக உயர்ந்துள்ளது என்று சுவிட்சர்லாந்து தேசிய வங்கி வெளியிட்ட
அறிக்கை ஒன்று கூறுகின்றது. சுவிட்சர்லாந்து வங்கிகளில், இந்தியாவைச் சேர்ந்த தனிநபர்கள்
மற்றும் நிறுவனங்கள் சேமித்து வைத்துள்ள பணம் மற்றும் இந்தியர்கள் தங்களது நம்பிக்கைக்கு
உரியவர்கள் மூலம் சேமித்து வைத்துள்ள பணம் என, இந்தியர்கள் மொத்தம் சேமித்து வைத்துள்ள
பணத்தின் அளவு 2011ம் ஆண்டின் இறுதியில், 12 ஆயிரத்து 740 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது
என்றும் அவ்வறிக்கை கூறுகின்றது. சுவிட்சர்லாந்து வங்கிகளில் இந்தியர்கள் சேமித்து
வைத்துள்ள பணம், கடந்த 2006ம் ஆண்டில், 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் உயர்ந்தது. ஆனால்,
2010ம் ஆண்டில் இதில் மூன்றில் ஒரு பங்கிற்குக்கீழ் குறைந்தது. 2011ம் ஆண்டில் 3,500
கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. அதாவது, 2010ம் ஆண்டின் முடிவில், சுவிஸ் வங்கிகள் இந்தியர்களுக்கு
செலுத்த வேண்டிய தொகை 9,295 கோடி ரூபாய். இவ்வாறு அந்நாட்டு ஆண்டுக் கையேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.