பெண்களுக்கான நிலைமையில் மிக மோசமான இடத்தில் இந்தியா
ஜூன்,14,2012. உலகில் முன்னேற்றம் கண்டுவரும் மற்றும் செல்வம் மிகுந்த நாடுகள் அளவில்
நடத்தப்பட்டுள்ள ஆய்வொன்றில், பெண்களுக்கான நிலைமைகளில் இந்தியா மிகவும் பின்தங்கியுள்ள
ஒரு நாடாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தாம்ஸன் ராய்ட்டர்ஸ் அறக்கட்டளை அமைப்பு நடத்திய
இந்த ஆய்வில் பெண்களின் கல்வி, நலப்பாதுகாப்பு, தொழில் வாய்ப்புகள், பெண்களுக்கு எதிரான
வன்முறைகள் என பல்வேறு விடயங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. பொருளாதார வழியில்
முன்னேற்றம் அடைந்துவரும் 19 நாடுகள் பற்றி, குறிப்பாக மெக்ஸிக்கோ, இந்தோனேசியா, பிரேசில்,
மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் பற்றி இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் அண்டை
நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகள் எதுவும் இந்த ஆய்வில் உள்ளடக்கப்படவில்லை. இந்தியாவில்
நடந்துவரும் சிறுவயது திருமணங்கள், வரதட்சணைக் கொடுமைகள், வீட்டில் நடக்கும் வன்முறைகள்,
பெண் குழந்தைகள் கருவில் அழிக்கப்படுதல் உள்ளிட்ட விவகாரங்களால் தான் இந்தியா இந்த நாடுகளின்
பட்டியலில் பெண்கள் நலனில் மிக அடிமட்டத்தில் இருக்கின்றது என்று இவ்வாய்வறிக்கை கூறுகிறது. வீட்டில்
நடக்கும் வன்முறைகளுக்கு எதிராக 7 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் நிறைவேற்றப்பட்ட
சட்டம் முன்னேற்றப் போக்கைக் காட்டிவருவதாக ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதும் இங்கு
குறிப்பிடத்தக்கது. இந்தியாவைப் பொறுத்தவரை, சமூகத்தில் பெண்களுக்கு உள்ள அந்தஸ்து
மற்றும் அங்கீகாரம் என்பது அவர்களின் வர்க்கம் மற்றும் செல்வத்தைப் பொறுத்துதான் தீர்மானிக்கப்படுகிறது. நன்றாகப்
படித்த, தொழில்புரிகின்ற மேற்குல வாழ்க்கைத் தரத்தை அனுபவிக்கின்ற, சுதந்திரத்தை அனுபவிக்கின்ற
மேல்தட்டு வர்க்கப் பெண்கள் உள்ள இந்தியாவில், பின்தங்கிய கிராமங்களிலும் வளர்ச்சிக்குறைந்த
மாநிலங்களிலும் நிலைமை தலைகீழாக உள்ளது என இவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. தாம்ஸன்
ராய்ட்டர்ஸ் அறக்கட்டளை அமைப்பு நடத்திய இந்த ஆய்வுப்படி, பெண்கள் நலன் பற்றிய விடயத்தில்
கனடாதான் மிகச்சிறந்த நாடாக இருக்கிறது. அடுத்தபடியாக, ஜெர்மனியும், பிரிட்டனும் இருக்கின்றன.
இப்பட்டியலில் அமெரிக்கா 6வது இடத்தில் இருக்கிறது.