2012-06-09 15:01:46

திருத்தந்தை, இலங்கை அரசுத்தலைவர் சந்திப்பு


ஜூன் 09,2012. இலங்கை அரசுத்தலைவர் மகிந்த இராஷபக்ஷேவை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இலங்கையின் ஒப்புரவுக்கு உலகினர் இணைந்து தீர்வு காண்பார்கள் என்ற தனது நம்பிக்கையைத் தெரிவித்தார்.
இலங்கையின் நீண்டகால உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களின் நியாயமான ஏக்கங்களுக்கு ஒத்திருக்கும் வகையில் தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்தார் திருத்தந்தை.
இலங்கையின் வெளியுறவு அமைச்சர், உதவி அமைச்சர், மத்திய வங்கித் தலைவர், முன்னாள் நீதி அமைச்சர் உட்பட 2 பெண்கள் மற்றும் 8 ஆண்கள் கொண்ட குழுவுடன் திருத்தந்தையைச் சந்தித்த அரசுத்தலைவர் இராஷபக்ஷே, அச்சந்திப்புக்குப்பின்னர் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சிசியோ பெர்த்தோனே, திருப்பீட நாடுகளுடனான உறவுகளின் செயலர் பேராயர் தொமினிக் மம்பர்த்தி ஆகியோரையும் சந்தித்தார்.
அந்நாட்டின் சமூக, பொருளாதார முன்னேற்றத்துக்கும் ஒப்புரவுக்குமென எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் இச்சந்திப்பில் இடம்பெற்றன என்று திருப்பீட பத்திரிகை அலுவலகம் அறிவித்தது.








All the contents on this site are copyrighted ©.