கிறிஸ்தவ தலித் மக்களுக்கு சேரவேண்டிய உரிமைகள் வழங்குவதை இந்திய அரசு கால வரையறையின்றி
தள்ளிப் போடமுடியாது
ஜூன்,08,2012. கிறிஸ்தவ தலித் மக்களுக்குச் சேரவேண்டிய உரிமைகள் வழங்குவதை இந்திய அரசு
கால வரையறையின்றி தள்ளிப் போடமுடியாது என்று இந்திய ஆயர் பேரவையில் பணியாற்றிய அருள்பணி
காஸ்மன் ஆரோக்கியராஜ் கூறினார். இந்திய ஆயர் பேரவையின் ஓர் அங்கமான ஒடுக்கப்பட்டோர்
பணிக்குழுவின் செயலராகப் பணியாற்றிய அருள்பணி ஆரோக்கியராஜ், தன் பொறுப்பிலிருந்து இப்புதனன்று
பணிமாற்றம் அடைந்தபோது, அவருக்கு அளிக்கப்பட்ட பிரியாவிடை நிகழ்வில் இவ்வாறு கூறினார். கிறிஸ்தவ
தலித் மக்களின் உரிமைகளுக்காகப் போராடுவது தன் வாழ்வின் முக்கியப் பணி என்று எடுத்துரைத்த
அருள்பணி ஆரோக்கியராஜ், தன் பணிக்காலத்தின்போது, இஸ்லாமியரையும், ஏனைய கிறிஸ்தவர்களையும்
இணைத்துப் போராடியது ஒரு சிறந்த முன்னேற்றம் என்பதைச் சுட்டிக்காட்டினார். இப்பிரியாவிடை
நிகழ்வில் பங்கேற்ற டில்லி உயர்மறைமாவட்டப் பேராயர் Vincent Concessao, அருள்பணி காஸ்மன்
ஆரோக்கியராஜ் அவர்களின் அர்ப்பண உணர்வையும், உறுதிப்பாட்டையும் பாராட்டினார். ஒடுக்கப்பட்டோர்
பணிக்குழுவின் புதுச் செயலராக அருள்பணி தேவசகாயராஜ் பணியாற்றுவார் என்று UCAN செய்திக்
குறிப்பொன்று கூறுகிறது.