ஹெயிட்டியில் உள்ள கத்தோலிக்கத் திருஅவை நம்பிக்கை இழக்காமல் தொடர்ந்து போராடி வருகிறது
- அமெரிக்க ஐக்கிய நாட்டுப் பேராயர்
ஜூன்,07,2012. ஹெயிட்டி நாட்டில் உள்ள கத்தோலிக்கத் திருஅவை நம்பிக்கை இழக்காமல் தொடர்ந்து
போராடி வருகிறது என்று அமெரிக்க ஐக்கிய நாட்டுப் பேராயர் ஒருவர் கூறினார். 2010ம்
ஆண்டு ஜனவரி 12ம் தேதி ஹெயிட்டியில் ஏற்பட்ட நிலநடுக்கம் பெருமளவு உயிர் சேதங்களையும்,
பொருள் சேதங்களையும் உருவாக்கியது. இந்த நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு,
கடந்த ஈராண்டுகளாய் உதவிகள் செய்துவரும் அமெரிக்க ஆயர் பேரவையும், கத்தோலிக்கத் துயர்
துடைப்பு அமைப்பும் அண்மையில் நடத்திய ஒரு கூட்டத்தில் உரையாற்றிய Miami பேராயர் Thomas
Wenski, ஹெயிட்டி மக்களின் விசுவாசத்தைப் பாராட்டினார். ஹெயிட்டியின் தலைநகரை மீண்டும்
கட்டியெழுப்பும் முயற்சிகள் தொடர்ந்தாலும், எதிர்காலத்தில் நிலநடுக்கங்களைச் சமாளிக்கும்
உறுதிகொண்ட கட்டிடங்களை உருவாக்க வேண்டியிருப்பதால், இன்னும் பல சவால்கள் உள்ளன என்று
பேராயர் Wenski சுட்டிக்காட்டினார்.